கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில், ஞானசார தேரர் ஏமாற்றி விட்டார்: கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர்

🕔 March 16, 2020

பாறுக் ஷிஹான்

ல்முனை உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாது விட்டால், மீண்டும்  உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவும் தயங்க மாட்டேன் என  கல்முனை உப பிரதேச செயலகத்தின் தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு கடந்த காலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்  கல்முனை அமைந்துள்ள  தனியார் விடுதி ஒன்றில் இன்று திங்கட்கிழமை கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துதல் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே, இதனைக் கூறினார்.

தொடர்ந்து அங்கு தெரிவிக்கையில்;

“கடந்த 2019ஆம் ஆண்டு  கல்முனை உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்த உண்ணாவிரதி நான். அந்த வகையில் நாங்கள் போராட்டத்தை கைவிடும்போது, எங்களை நாடி வந்த பல அரசியல்வாதிகள் பிரமுகர்கள் அனைவரும் எமக்கு  பல வாக்குறுதிகளை தந்திருந்தனர்.

அதிலும் வந்தவர்கள் இவ்விடயத்தில் தங்கள் பதவியைக் கூட துறப்பேன் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அவ்வாறான ஒரு விடயமும் நடைபெறவில்லை. ஏன் இதுவரை அவர்கள் பதவியை துறக்க வில்லை? ஏன் இதுவரை அவர்கள் உரிய தீர்வை பெற போராடவில்லை? என்பது இன்னும் புதிராகவே உள்ளது.

மேலும் எங்களோடு இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் முன்னெடுப்போம் என்று சொன்ன அரசியல்வாதிகள் கூட இன்று மக்கள் மத்தியிலே தேர்தல் காலம் என்ற படியினால் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கினர்.

எனவே இவ்வாறான பொய்யான அரசியல்வாதிகளின்  பொய்யான செயற்பாடுகளை இனங்காண வேண்டும். அதாவது அரசியல் தரகு வியாபாரம் செய்பவர்கள், அரசியல் வியாபாரிகளை ஓரம்கட்ட வேண்டும் .

உண்மையான தலைமைத்துவத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் ஒரு பெரிய சக்தியாக திகழ வேண்டும். அப் பொழுதுதான் நாங்கள் எங்களுடைய மக்களுக்கு உரிய உரிமைகளை அரசிடமிருந்து மீட்டெடுக்க முடியும்.  

உண்ணாவிரத தளத்துக்கு வருகை தந்த மதகுருவான கலகொட அத்தே ஞானசார தேர் கொடுத்த வாக்குறுதியை நம்பி, உண்ணாவிரதப் போராட்டத்தை தளர்த்தினோம். ஆனால் அவரது வாக்குறுதியும் பொய்த்து போனது.

அதேபோன்றுதான் அரசியல் பிரமுகர்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் பொய்த்துப்போயுள்ளன. இன்று எங்களுடைய மக்கள் மத்தியிலும், உண்ணாவிரதம் இருந்த என்  மனதிலும் ஏமாற்றம் ஏற்பட்டமை மிகவும் ஆழ்ந்த கவலையைத் தருகின்றது.

எனினும் கணக்காளர் ஒருவர் நியமிப்பத்ற்கான வேலைத் திட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அதனை  கண்ணூடாக காணக் கூடியதாகவும் இருந்தது. ஆனால் எவ்வாறுதான் அது  மாயமாக மறைந்து விட்டது என்பதை அறியமுடியவில்லை. திரைமறைவில் ஏதோ நடந்தேறியிருக்கிறது.

ஆகவேதான்  கல்முனை உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவிட்டால், நான் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவும் தயங்க மாட்டேன் என தெரிவிக்க விரும்புகின்றேன்” என்றார்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதேச செயலகத்தின் முன்னால்  உண்ணாவிரத போராட்டம் ஒன்று கடந்த வருடம் இடம்பெற்றிருந்தது.

இந்த உண்ணாவிரதத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம் சிவம் குரு, கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா. சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம், ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்