நிந்தவூர் கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: தலைமை அதிகாரி தலைமறைவு

🕔 January 4, 2020

பாறுக் ஷிஹான்

ம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவை நிலையத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர்   தாக்கப்பட்டமை தொடர்பில், முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் கமநல சேவை நிலையத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தரை, அந்த நிலையத்தில் தலைமைய கமநல அபிவிருத்தி அதிகாரியாகப் பணியாற்றும் நபர், புதிய வருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமைப் பொறுப்பேற்கும் நிகழ்வின்போது தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த பெண் உத்தியோகத்தர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண் உத்தியோகத்தரை தாக்கிய நபர் தற்போது தலைமறைவாகி உள்ளார் எனவும், சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தான் தாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் தனக்கு ஒரு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறும் தாக்குதலுக்குள்ளான பெண், ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் பின்னணி

நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் நிலைய முகாமைத்துவ உத்தியோகத்தராக பணி புரிந்து வரும் பி. தவப்பிரியா என்பவர் கடந்த முதலாம் திகதி, அந்த நிலையத்தின் தலைமைய கமநல அபிவிருத்தி அதிகாரி ஐ.எல்.ஏ. ஹாலிக் என்பவரால் கடமை நேரத்தில் தாக்கப்பட்டார்.

 புதிய வருடத்தின் கடந்த 01 ம் திகதி சத்திய பிரமாணம் நிகழ்வு ஆரம்பமாகிய வேளை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும்  அனைத்து ஊழியர்களுக்கு முன்னிலையில் தனக்கு  கன்னத்தில் குறித்த நபர் அறைந்துள்ளதாக  அன்றைய தினம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடொன்றை மேற்கொண்ட பின்னர்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 குறித்த பெண் ஊழியர் தாக்கப்பட்டு 3 நாட்கள் ஆகியும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட அதிகாரி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கல்முனை பிராந்திய கிளையில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட பெண் எழுதியுள்ள கடிதம் ஒன்றில்  குறித்த அலுவலகத்தில் பணியை தொடர விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்