மறதி

🕔 August 27, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

க்களின் ஞாபக மறதியில்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்குகின்றனர். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர், அவற்றில் அதிகமானவற்றினை நிறைவேற்றுவதில்லை. அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை அவர்கள் கூறுவார்கள். அப்படியே பதவிக்காலம் கழிந்து போகும். மீண்டும் ஒரு தேர்தல் வரும். எந்தவித வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ இன்றி, மீண்டும் அவர்கள் தேர்தலில் குதிப்பார்கள், திரும்பவும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். முன்னைய தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையெல்லாம் மக்களுக்கும் மறந்து போயிருப்பார்கள். எதுவித சொரணையுமின்றி, அதே ஆட்களுக்கு மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள்.

ஆண்டாண்டு காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. விலக்காக மக்களுக்கு சிலவேளை கோபம் வருவதுமுண்டு. அப்போது ஆட்சிகள் புரண்டு போகும். வாக்குறுதிகளால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்கையில் அவர்கள் கோபம் கொள்ளத் தொடங்குகின்றனர். மக்கள் ஏமாற்றப்பட்டதை, அவர்களுக்கு யாரோ சிலர் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

கடமை

மக்களின் மறதியில் ஓங்கி அடிப்பதும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதும் ஊடகங்களின் கடமையாகும். அதனால்தான் சமூகத்தின் ‘காவல் நாய்’ என்று ஊடகங்கள் அழைக்கப்படுகின்றன. மக்கள் மறந்து போகும் விடயங்களை, ‘குரைத்துக் குரைத்து’ ஊடகங்கள் நினைவுபடுத்த வேண்டியுள்ளன. ‘திருடர்கள் ‘ வரும்போது உறங்கும் சமூகத்தை சத்தமிட்டுக் ‘குரைத்து’ எழுப்பி விடுவது ‘காவல் நாயின்’ பிரதான கடமையாகும்.

மற்றுமொரு ஜனாதிபதி தேர்தலை விரைவில் மக்கள் சந்திக்கவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியும், அந்தக் கட்சியின் பங்காளிகளும் சேர்ந்து கொண்டு வந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைத்து நல்லாட்சி செய்யப்போவதாகக் கூறிக் கொண்டு வந்தவர்கள், இப்போது ஆளுக்கொரு திசையில் பிரிந்து நின்று கொண்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். இந்தவேளையில், மக்களுக்கு சில விடயங்களை நினைவுபடுத்த வேண்டிய கடமை உள்ளது.

வாக்குறுதிகள்

மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் மக்கள் ஆட்சிக்குக் கொண்டுவந்தமைக்கு பிரதான காரணம் என்ன என்பதை முதலில் நினைத்துப் பாரக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மீது கொண்ட கோபத்தினால்தான், அவருக்கு எதிராகக் களமிறங்கிய மைத்திரிiயையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் மக்கள் ஆதரித்தனர். அதனால்தான், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று, மைத்திரியும் ரணிலும் மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள், கொலைகள், வெள்ளை வேன் கடத்தல்கள், மனிதர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் என, எல்லாவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரியும் ரணிலும், கடந்த நாலரை ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் நடந்த அக்கிரமங்களில் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை முக்கியமானது. மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மீதுதான் அந்தக் கொலைக்கான பழி சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட பின்னர், நிகழ்வொன்றில் பங்குபற்றி உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்களூ ‘பதவியிலிருந்த போது கோட்டாபய ராஜபக்ஷ செய்த குற்றங்களுக்கு மன்னிப்புக் கோருவாரா’ என்று கேள்வியெழுப்பியிருந்தார். அதன்போது லசந்த கொலை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு லசந்தவின் மகள் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருந்த பல விடயங்கள் முக்கியமானவை.

‘ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தந்தையின் கொலைக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்று கூறிய ரணில் விக்ரமசிங்க, ஆட்சிக்கு வந்ததும் கோட்டாபய ராஜபக்ஷவைப் பாதுகாத்தார்’ என்று, லசந்தவின் மகள் தனது கடிதத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

மேலும், ‘தனது தந்தையின் படுகொலையை அரசியலுக்கே பயன்படுத்துகின்றனர். உண்மையான நீதியைப் பெற்றுத் தருவது யாருடைய நோக்கமுமல்ல. ஜனாதிபதி தேர்தலுக்காக தனது தந்தையின் படுகொலையை ரணில் விக்ரமசிங்க நினைவுகூரக் கூடும்’ எனவும், அந்தக் கடிதத்தில் ஊடகவியலாளர் லசந்தவின் மகள் தெரிவித்திருந்தார்.

தற்போதைய ஆட்சியாளர்களையும், குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவையும் புரிந்து கொள்வதற்கு லசந்தவின் மகள் எழுதிய கடிதத்தின் மேற்சொன்ன விடயங்களே போதுமானவையாகும்.

சிறுபான்மையினரின் கோபமும், ரணிலின் முதலீடும்

விடுதலைப் புலிகளை அழித்தொழித்தார் என்பதற்காக தமிழர்களும், பொதுபலசேனா போன்ற இனவாதிகளை வைத்து தம்மை இம்சித்தார் என்பதற்காக முஸ்லிம்களும் மஹிந்த மீது கொண்டிருந்த ‘கடுங்கோபத்தை’, கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க முதலீடாகப் பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான் ‘மஹிந்த ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு அவர்களைத் தண்டிப்பேன்’ என்று தேர்தல் காலங்களில் ரணில் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரையிலான தனது ஆட்சிக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட, ரணில் தூக்கிப் போடவில்லை என்பதுதான் களநிலைவரமாகும்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நடைபெற்ற அக்கிரமங்களில் மற்றொன்று வசிம் தாஜுத்தீன் படுகொலையாகும். அந்தக் கொலையுடன் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, விசாரணைகள் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனாலும், முக்கிய நபர்கள் எவரும் அந்தக் கொலை தொடர்பில் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விடயத்திலும் ராஜபக்ஷவினரை ரணில் பாதுகாப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

களவு பிடிக்க வந்தோர், திருடனான கதை

இன்னொரு புறம், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் நல்லாட்சியில் நடந்த மிகப்பெரும் அதிர்ச்சியாகும். இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரும் நிதி மோசடியென இது அறிப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கவின் அழுத்தத்தின் பிரகாரம் மத்திய வங்கிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மகேந்திரன், இந்த மோசடியின் பிரதான சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார். இன்னொரு புறம், ரணிலுக்கு நெருக்கமானவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்கவும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், அந்த விவகாரத்தில் இதுவரை ரணில் வாய் திறக்கவில்லை. அந்த மோசடி தொடர்பில் அலட்டிக் கொள்ளவுமில்லை. ராஜபக்ஷவினரின் மோசடியை பிடிப்போம் என்கிற வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டின் கஜானாவை காலியாக்கியமைதான் இங்கு முரண் நகையாகும்.

ஏமாற்றங்கள்

இப்படி ஒரு புறம் இவர்கள் ஏமாற்றங்களை தந்து கொண்டிருக்கும் நிலையில், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தங்கள் பங்குக்கு அவர்களின் சமூகத்தை ஏமாற்றி வருகின்றதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தை விடவும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும், அக்கிரமங்களும் இப்போதைய ஆட்சிக் காலத்தில்தான் அதிகம் நடந்துள்ளன. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்றிருந்த மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் அங்கு ஊடகங்களிடம் பேசுகையில்ளூ ‘கடந்த அரசாங்கத்தை விடவும், இந்த அரசாங்கத்தில்தான் சிறுபான்மையினரின் நலனில் அதிக அக்கறை காட்டப்படுகிறது. அபகரிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொடுத்தல், புதிய சட்டவாக்கங்கள், அவற்றிலே சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி நடக்காமல் பார்த்துக் கொள்வதில் இப்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், முஸ்லிம்கள் நிகாப் அணிவதற்கு தடையேற்படுத்தியது இந்த அரசாங்கம்தான். அரச நிறுவனங்களுக்குள் ஹபாயா அணிந்து சென்ற போது – முஸ்லிம் பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டமை இந்த அரசாங்கத்தில்தான். குர்ஆன் மற்றும் அரபு மொழியில் எழுதப்பட்ட நூல்களை வைத்திருந்தவர்கள் இந்த அரசாங்கத்தில்தான் கைது செய்யப்பட்டார்கள். குர்ஆனில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்துக்குள் இருப்பவர்களே குரலெழுப்பிய சம்பவங்கள் இந்த அரசாங்கத்தில்தான் இடம்பெற்றது. முஸ்லிம்களின் சொத்துகள் கொழுத்தி அழிக்கப்பட்ட போதெல்லாம் ஆட்சியாளர்கள் நாட்கணக்கில் கண்டும் காணாமல் இருந்தது இந்த அரசாங்கத்தில்தான். ஆனாலும், இந்த அரசாங்கத்தில்தான் சிறுபான்மையினரின் நலனில் அக்கறை காட்டப்படுவதாக மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கூறியிருக்கின்றார்.

‘முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசாங்கத்தில் நடந்த அநியாயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்’ என, முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டும் அதற்காக உழைத்துக் கொண்டும் இருக்கின்ற இந்தக் கால சூழ்நிலையில், ‘சிறுபான்மையினருக்கு இப்போதைய அரசாங்கம்தான் உரிமைகளை அள்ளி வழங்கி வருகிறது என, முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரே சர்வதேசத்தின் முன்னிலையில் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

புஷ்வாணமான புதிய அரசியலமைப்பு

இந்த நாட்டில் பல தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, புதிய அரசியலமைப்பு ஒன்றினை தாங்கள் முன்வைக்கப் போவதாக ரணிலும் மைத்திரியும் தத்தமது தேர்தல் காலங்களில் வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால், இதுவரை புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவில்லை. அதனைத் தயாரிப்பதற்கென முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் நின்று போய்விட்டன. பௌத்தர்களின் எதிர்ப்பினை மீறி, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இவர்கள் கூட, எந்த நலவையும் செய்து விட மாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என, மகாநாயக்க தேரர்கள் கூறியதை நாம் மறந்து விட முடியாது.

ஒரு காலத்தில் மிஸ்டர் ‘க்ளீன்’ என்று அழைக்கப்பட்டவர் ரணில் விக்ரமசிங்க. அவரின் கைகள் துப்புரவானவை என்பதைக் குறிக்க அவ்வாறு அழைக்கப்பட்டார். ஊழல் மோசடிகளுடன் அவர் தொடர்புபடாதவர் என்பதை அந்த அடைமொழி கூறியது. மேலும், ‘கனவான் அரசியல்வாதி’ என்று ரணில் விக்ரமசிங்கவை சக அரசியல்வாதிகளே சொல்வார்கள். கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவதில் பின்னடிப்பதில்லை என்று, அவருக்கு ஒரு பெயர் உள்ளது. ஆனால், இப்போதும் இந்த அடைமொழிகளுக்கு ரணில் பொருத்தமானவர்தானா என்கிற நியாயமான கேள்விகள் உள்ளன. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் ‘க்ளீன்’ – அழுக்காகி விட்டதாக விமர்சனங்கள் உள்ளன.

ஆனாலும், இவை குறித்தெல்லாம் இப்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கும் சிறுபான்மை அரசியல் தலைவர்கள் எவரும் தட்டிக் கேட்டவில்லை. பதிலாக, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு துதிபாடும் வேலைகளைத்தான் செய்கின்றனர். குறிப்பாக, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அதனை சிறப்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர்.

ஹிஸ்புல்லாவின் கோசம்

இன்னொருபுறம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் சார்பாக ஒருவர் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையொன்றும் எழுந்து வருகிறது. குறிப்பாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இந்தக் கோசத்தை முன்வைத்துள்ளார். மேலும், அவ்வாறு போட்டியிடுவதற்கு, தானே தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காமல் போனால், அந்த வாக்குகளை ஐ.தே.முன்னணி வேட்பாளருக்குக் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதற்காகவே, முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என, ஹிஸ்புல்லா கூறுகிறார் என்கிற விமர்சனங்களும் உள்ளன. மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசியாகவே இப்போதும் ஹிஸ்புல்லா பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஹிஸ்புல்லா இதற்கு கூறும் விளக்கம் வேறாக உள்ளது. இரண்டுக்கு மேற்பட்ட பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் போது எவராலும் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற முடியாது என்றும், அப்போது இரண்டாவது தெரிவு வாக்குகளே, வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்பதால், முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம்களுக்கு நலவாக அமையும் என்றும் கூறுகிறார.;

நடக்கின்றவற்றினையெல்லாம் கூர்ந்து கவனிக்கும் போது, பிரதான போட்டியாளர்களில் எந்தத் தரப்பை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பதை, கிட்டத்தட்ட சிறுபான்மை அரசியல் தலைவர்கள் இப்போதே தீர்மானித்து விட்டார்கள் போலவே தெரிகிறது.

அந்தத் தீர்மானங்களில் சமூக அக்கறை என்பது மருந்துக்காயினும் இருக்குமா என்றுதான் தெரியவில்லை.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (27 ஓகஸ்ட் 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்