வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு
உள்ளுராட்சி மன்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தவர்கள், தங்கள் வழக்குகளை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக, ஐ.தே.கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற குழுவினரை நேற்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்த போதே, இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும், கட்சித் தலைவரின் அனுமதியின்றி ஊடகவியலாளர் சந்திப்புகள் எதனையும் நடத்தக் கூடாது என, இதன்போது ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தினார்.
கட்சித் தலைவர் இல்லாத சந்தர்ப்பத்தில் கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு அல்லது அரசாங்கத்தின் பிரதம கொறடா, கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்து அனுமதி பெற்ற பின்னரே ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்த வேண்டும் எனவும், ரணில் இதன்போது வலியுறுத்தினார்.