கிறிஸ் பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்

🕔 August 6, 2015
Hakeem - Kaluthura– எம்.ஐ.எம் – 

நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை – அவர்களின் ஆண்கள் கம்பு, தடிகளுடன் சென்று, இனவாதிகளிடம் இருந்தும் கிறிஸ் பூதங்களிடம்  இருந்தும் பாதுகாக்கும் நிலைமை இனிமேல் இந்த நாட்டில் ஏற்படாது என்று, அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

கழுத்துறை மாவட்டம் அத்துலுகமவில் நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்;

ஜனவரி எட்டாம் திகதி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – பல கட்சிகளுடன் இணைந்து இந்த நாட்டில் ஒரு சாதனையை நிகழ்த்தியது – அதுதான் ஆட்சி மாற்றம். அனைத்து முஸ்லிம்களின் உதவியுடன் இந்த நாட்டையும் குறிப்பாக முஸ்லிம்களையும் அழித்துக்கொண்டிருந்த மஹிந்தவின் ஆட்சிக்கு அன்று முற்றுப்புள்ளி வைத்தோம்.

மஹிந்தவைத் தோற்கடிக்கலாம் என்று எவரும் நம்பவில்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும்  ஒன்றிணைந்து மஹிந்தவின் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் பிரசாரம் செய்தன. ஜேவிபியும் ஜாதிக ஹெல உறுமயவும் மஹிந்தவின் ஊழல், மோசடிகளை அம்பலப்படுத்தின. ரணில் விக்ரமசிங்க சரியான அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை, அமைப்புகளை முடிச்சுப் போட்டு இணைத்தார். சரியான வியூகத்தை வகுத்தார். ஆட்சி கவிழ்ந்தது.

ஆட்சியை கவிழ்த்து 100 நாள் வேலைத் திட்டம் ஒன்றை  முன்னெடுத்து வெற்றியும் கண்டோம். அந்த வேலைத் திட்டத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள், ஐக்கிய தேசிய கட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் இந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவது உறுதி.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பெரும் துன்பத்தை அனுபவித்தனர். நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுவதற்கு பெண்களால் பள்ளிவாச்சல்களுக்குச் செல்ல முடியவில்லை. கிறிஸ் பூதங்கள் அவர்களை விரட்டின. அந்தப் பெண்களைப் பாதுகாக்க ஆண்கள் கம்பு, தடிகளுடன் காவல் காக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இனிமேல் அந்த நிலை ஏற்படாது.

அதுமாத்திரமன்றி, வரலாறு காணாத அபிவிருத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ளன. மஹிந்தவின் ஆட்சியில் எம்மால் போதுமான அபிவிருத்திகளைச் செய்ய முடியவில்லை. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போதுதான் உரிய அபிவிருத்திகளைச் செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை நாம் இழந்துவிடக்கூடாது.

எனக்கு வழங்கப்பட்டுள்ள நீர் வழங்கள்,வடிகாலமைப்பு அமைச்சின் ஊடாக, பாரிய நீர் விநியோகத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. பேருவளை உள்ளிட்ட முழு களுத்துறை மாவட்டமும் இதனால் நன்மை அடையும் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்