எதிர்வரும் நாடாளுமன்றில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் 15 ஆக குறையும் அபாயமுள்ளது; ஆசாத் சாலி
🕔 August 5, 2015
– எம்.வை. அமீர் –
எதிர்வரும் நாடாளுமன்றத்தில் 22 க்கு மேல் இருக்க வேண்டிய முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள், 15 ஆகக் குறைந்து விடக்கூடிய ஆபத்து உள்ளதாக, மேல் மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற அபேட்சகருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐ.தே.கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரஷாக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆசாத் சாலி மேலும் உரையாற்றுகையில்;
“ரணில் பிரதமராக வந்தால் பிரச்சினைகள் வரும் என்றும், மகிந்த வந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் கூறித்திரிகின்றார். இப்படியானவர்களை எங்கு நிறுத்துவதென்று தெரியவில்லை. எவ்வாறான கஷ்டங்கள் வந்தாலும் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க, நாங்கள் முன்வருவோம்.
முஸ்லிம்களின் தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்போர். மக்களின் வாக்குகளைப்பெற்றுக் கொண்டு, மக்களை நட்டாற்றில் விட்டு விருவார்கள். மக்களை விடுத்து, இவ்வாறான தலைவர்கள் மட்டும் சுகபோகம் அனுபவிக்கின்றனர். இவ்வாறான தலைவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
தேர்தல் தினமான எதிர்வரும் 17 ஆம் திகதி, மக்கள்தான் பலசாலிகள். அன்றைய தினம் தலைவர்களைத் தெரிவு செய்வதற்கு நீங்கள்தான் வாக்களிக்க வேண்டும்.
பாரிய அபிவிருத்திகளை செய்ததாகக் கூறிக்கொள்ளும் மகிந்த ராஜபக்ஷ, அவரை தெரிவு செய்த மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை கூட கண்டு கொள்ளவில்லை. கப்பல் போகாத துறைமுகத்தையும், மக்களுக்குப் பயன்படாத கட்டிடங்களையும் மட்டுமே கட்டி, அதனூடாக, தனது சட்டைப் பையினை நிரப்பிக் கொண்டார்.
மகிந்தவின் யுகத்துக்குள் மீண்டும் நாங்கள் புகுந்துவிடக் கூடாது. முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கின்ற, நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒற்றுமையுடன் வாக்களித்து – ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடைய வைக்கவேண்டும்.
22க்கு மேல் இருக்கவேண்டிய முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநித்துவம், 15 அளவில் குறையும் ஆபத்து உள்ளது.
ஜோசியக்காரனின் கதையை நம்பியதான் மூலம், மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய தலையில் அவரே மணலை வாரிப் போட்டுக் கொண்டார். பள்ளிவாசல்கள் மீது எப்போது அவர் கை வைத்தாரோ, அன்றே அவருடைய முடிவுகாலம் ஆரம்பித்து விட்டது.
நாட்டை அபிவிருத்தி செய்து, எதிர்கால சந்ததியினருக்கு – நமது தேசத்தினை சிறந்த முறையில் கையளிக்க விரும்பும் ஒவ்வொரு குடிமகனும், ஐக்கிய தேசியக் கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும்” என்றார்.