மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி

🕔 June 7, 2017
– எம்.ரீ. ஹைதர் அலி –

மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பகுதியில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம் சாட்டிமையின் ஊடாக, முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் களங்கம் விளைவித்து, சேறு பூசி இனமுறுகலை தோற்றுவிக்க முற்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மூதூர் – தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் இன்று புதன்கிழமை கண்டண அமைதிப் பேரணி ஒன்றினை நடாத்தியது.

இதன்போதும், குற்றமற்ற ஐவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் பேரணியினர் கோரிக்கை விடுத்தனர்.

மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பெருவெளிப்பகுதியில், மூன்று பாடசாலைச் சிறுமிகள், கடந்த மாதம் 25ஆம் திகதி அடையாளம் தெரியாதவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் அங்குள்ள பாடசாலையொன்றில் கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவர், அப்பிரதேச தமிழ் மக்களால் கட்டி வைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். இந் நிலையில் பொலிசாரால் அவர்கள் மீட்கப்பட்டு, கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவரும் கடந்த நேற்று செவ்வாய்க்கிழமை மூதூர் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டு சிறுமியர்களால் அடையாளம் காண்பதற்காக அடையாள அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதும் சிறுமியர்களால் இவர்கள் ஐவரும் அடையாளம் காட்டப்படவில்லை.

இந்த நிலையில், பிரதேச தமிழ் மக்கள், குறித்த சிறுமியருக்கு நியாயம் கோரி பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைய நடாத்தி வந்தனர். இந்நிலையில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நோக்கிலல்லாமல்இ,ச்சம்பவம் தொடர்பாக பலர் முஸ்லிம் சமூகத்தினை சமூக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட விதத்தில் மிக மோசமான முறையில் விமர்சித்து வந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில், முஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம் சாட்ட முற்பட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் களங்கம் விளைவித்து, சேறு பூசி இனமுறுகலை தோற்றுவிக்க முற்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தும் குற்றமற்ற ஐவரையும் விடுவிக்க வேண்டும் எனக்கோரியும் மூதூர் – தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம், இன்று புதன்கிழமை கண்டண அமைதிப்பேரணி ஒன்றினை நடத்தியது.

பேரணியின் இறுதியில் மூதூர் – தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.  அன்வர், மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் தோப்பூர் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் மகஜர்களையும் கையளித்தனர்.

இதன் பிற்பாடு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இரு சமூகங்களையும் சார்ந்த முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.  அன்வர், ஜனார்த்தனன் மற்றும் நாகேஸ்வரன், மூதூர் மற்றும் வெருகல் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், மூதூர் – தோப்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்’றும் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்;

“குற்றத்தை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். விசேடமாக பொலிஸாருக்கு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு இட்டிருக்கிறோம். அவற்றுக்கான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

மேலும் ஒரு தனி நபர் செய்த குற்றத்துக்காக, ஒரு சமூகத்தை விமர்சிப்பது இன முறுகலை ஏற்படுத்தும். பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி பெற்றோர் போராட்டங்களை நடத்துகின்றமையானது, பெற்றோர்களே தமது பிள்ளைகளின் கல்வியை சீர்குலைக்கின்ற செயற்பாடாகும்.

அத்தோடு, திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்துக்கு, மட்டக்களப்பு மற்றும் ஏனைய பகுதிகளில் போராட்டங்களை நடாத்துவது பொருத்தமற்ற செயலாகும். அவற்றினூடாக இனமுறுகலை ஏற்படுத்தும் ஒரு முறைமைதான் தெரிகிறது. இதனூடாக தோப்பூர் மற்றும் மூதூர் பிரதேசங்களில் இன்ற போராட்டங்கள் இடம்பெற்றன. இரண்டு சமூகமும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தால், உண்மையான குற்றவாளியை கைது செய்வதற்கான வழிவகைகள் கை நழுவிப்போகலாம். எனவே, ஆர்ப்பாட்டங்களை கை விடும்படி இரு சமூகத்தை சார்ந்தவர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட பொலிஸ் மா அதிபர் கருத்து தெரிவிக்கையில்;

“பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றவாளியின் இந்திரியம் டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உண்மையான குற்றவாளி யார் என்பதை அடையாளம் கண்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும்.  இரு சமூகத்தை சார்ந்தவர்களும் குற்றவாளியை கண்டு பிடிக்க உதவ வேண்டும்” என்றார்.

மாகாண கல்வி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்;

“தமிழ் சமூகத்தை சார்ந்தவர்கள் தமக்கான நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், முஸ்லீம் சமூகத்தை சார்ந்தவர்கள் நிரபராதிகள் தண்டிக்கபடக்கூடாது என்பதுடன் குற்றம் செய்தவர்கள் மாத்திரமே தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். எனவே, குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.

இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் கருத்து தெரிவிக்கையில்;

தமிழர் – முஸ்லீம் உறவை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அவற்றில் இருந்து இரு சமூகமும் அவதானமாக இருக்க வேண்டும். கடந்த மூன்று தசாப்த யுத்தத்திலிருந்து மீண்ட  நிலையில், இரு சமூகத்தவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

குற்றவாளி எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழக்கப்பட வேண்டும்” என்றார்.

இறுதியாக, இரு சமூகத்தை சார்ந்த பிரதிநிதிகளும், தாங்கள் எவ்வித போராட்டங்களையும் வீதிகளில் நடத்தக் கூடாது என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார். மேலும், குற்றவாளியை பொலிசார் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் எனவும் கூறினார்.

இதனையடுத்து, இரு சமூகங்களுக்குமிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு கூட்டம் முடிவுற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்