இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனையால் தாமதமானது, இலங்கை விமானப் போக்குவரத்து
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரை பயணத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த விமானங்கள் தாமதமடைந்துள்ளன.
இந்திய வான் பகுதியில் ஏவுகணை பரிசோதனையொன்று இடம்பெற்றதன் காரணமாகவே, குறித்த நேரத்தில் விமானங்கள் பறப்பதில் தாமதமேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சங்கத்தின் உப தலைவர் தரிந்து கஜதீர இது குறித்துக் கூறுகையில்; இந்தியாவின் வான் பரப்பில் ஏவுகணைப் பரிசோதனையொன்று இடம்பெறுவதால், குறித்த நேரத்தில் இலங்கையின் கிழக்கு வான்பரப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, இலங்கைக்கு இந்தியா அறிவித்திருந்ததாகக் கூறினார்.
இதன் காரணமாக, ஜகர்தா, சிங்கப்பூர், மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு, இன்று காலை பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானங்களான யூ.எல். 356, யூ.எல். 308 மற்றும் யூ.எல். 304 ஆகியவை தாமதித்தன என்றும் அவர் மேலும் கூறினார்.