கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு
– எம்.வை. அமீர் –
கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சுவர்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, கல்முனைப் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்தனர். மேலும், சிலைகளை சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை, ஆலயத்தின் குருக்கள் அடையாளம் காட்டியமையினை அடுத்து, குறித்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை, சிலைகளைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நபர், சித்த சுவாதீனமற்றவர் போல் காணப்படுவதாக – தரவைப் பிள்ளையார் ஆலயத்தின் குருக்கள் தெரிவித்தார்.
இந்த நிலையில், தரவைப் பிள்ளையார் ஆலயத்தின் மேற்படி சிலைகள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில், அப்பகுதி முஸ்லிம் மக்கள் தமது கவலையினை வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து, கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் ஏ. அமிர்தலிங்கம் தெரிவிக்கையில்; இந் நிகழ்வானது வேதனை தருகின்ற போதிலும், இதனால், தமிழ் – முஸ்லிம் உறவு சீர்குலைந்து விடக் கூடாது என்றும், இச் செயலைப் புரிந்தவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுதல் வேண்டும் என்றும் கூறினார்.