மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

🕔 August 7, 2016

Uthumalebbe - 096– கே.ஏ. ஹமீட் –

மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார்.

‘மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு அமைய வேண்டும் ‘ எனும் தலைப்பில், மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தினால் நேற்று சனிக்கிழமை விசேட செயலமர்வொன்று நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு, கருத்துத் தெரிவிக்கும் போதே, எம்.எஸ். உதுமாலெப்பை மேற்கண்டவாறு கூறினார்.

மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் தலைவர்  டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தலைமையில், நீர்கொழும்பு பிறவுன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த செயலமர்வில், உதுமாலெப்பை மேலும் தெரிவிக்கையில்;

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள் தங்களது சமூகத்துக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.  வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சிணைகளுக்கு தற்காலிக தீர்வாகவே நமது நாட்டில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டது. துரதிஸ்டவசமாக வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக, அந்த மாகாண மக்களுக்கு – மாகாண சபை முறைமையால் நீண்டகாலமாக நன்மைகளைப் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகள் நன்மைகளைப் பெற்றன.

நமது நாட்டில் அமைந்துள்ள 09 மாகாண சபைகளுக்கும் சமனான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரே நாட்டில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தும் போது 07 மாகாண சபைகளுக்கு ஒரு முறைமையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு வேறு விதமான முறைமையும் அமுல்படுத்துவது குறித்து, வடக்கு மற்றும்  கிழக்கு மாகாண மக்கள், மாகாண சபை முறைமையில் நம்பிக்கையிழக்கும் நிலமை உருவாகியுள்ளது. எனவே மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்கி வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இனப்பிரச்சிணைக்கான தீர்வுகளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் வழங்குவார் என, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைத்து சந்திரிக்கா அம்மையாருக்கு ஜனாதிபதித் தேர்தல்களில் வாக்களித்தனர். இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் முன்வைத்த போது, நமது நாட்டிலுள்ள இனவாத அரசியல்வாதிகளால் அத்தீர்வுத்திட்டம் எரிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 30 வருட காலமாக நமது நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினை இல்லாமல் செய்த போதும், இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பரலவாக்கத்தினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், இனவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் அத்திட்டத்திற்கு தடையாக இருந்து செயற்பட்டனர். இதன் காரணமாகவே நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன – தமில் பேசும் மக்களின் அதிக ஆதரவுடன் செய்யப்பட்டார்.

புதிய ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கி, அதிகார பகிர்வினை வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். எனவே, அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ளும் விடயத்தில், நமது நாட்டிலுள்ள இனவாதிகள் சிலருக்காக – அரசு தாமதம் காட்டக்கூடாது. மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று கூட 13வது சரத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்தமுடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாகாண சபையின் 13வது சரத்தின் படி, மாகாணங்களில் அமைந்துள்ள சிறிய நீர்ப்பாசன குளங்களை நிருவகிக்கும் பொறுப்பு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டது, பின்னர் மத்திய அரசாங்க கம நல சேவைத் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மாகாணங்களில் வாழுகின்ற விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, மாகாணங்களில் அமைந்துள்ள பாரிய நீர்ப்பாசன திட்டங்களை மத்திய அரசாங்க நீர்ப்பாசனத் திணைக்களம் நிர்வகிப்பதற்கும், மாகாணங்களில் அமைந்துள்ள சிறிய நீர்ப்பாசன குளங்களை மாகாண சபைகள் நிருவகிப்பதற்கும், புதிய அரசியலமைப்பு திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

தற்போது அமைந்துள்ள 13வது சரத்தின் படி, ஆளுநர்களுக்கு அதிகாரங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் மாகாண ஆளுநர்களோடு முரண்படுவதை தவிர்த்து விட்டு, நமது நாட்டுக்கான புதிய அரசியலமைப்பு திட்டத்தில், மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண சபைகளுக்கு, அதிகமான அதிகாரங்களை வழங்கி ஆளுநர்களுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தக்கூடிய வகையிலே, புதிய அரசியல் அமைப்பு உருவாகுவதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்