பௌத்தனாக அச்சம் கொள்கிறேன்; மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள புதுக் கவலை
பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள இடம், இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம், பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொரட்டுவயில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோதே, அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
“பௌத்தர்கள் என்ற ரீதியில் இந்த அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடம், இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நாட்டின் அரசியலமைப்புக் குறித்து கண்காணித்துக்கொண்டிருக்க வேண்டும்.
என்ன மாற்றங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன, வார்த்தை விளையாட்டுக்களின் ஊடாக ஏதேனும் தீங்கு மேற்கொள்ளப்படுகின்றதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். வார்த்தைகளில் மூடி இந்த நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கலாம்.
மேலும், போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, படைவீரர்களை பலிகொள்ளும் செயற்பாடுகள் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.