தலைப்புச் செய்திகள்

மாகாண சபை தேர்தல் தொடர்பில், ரில்வின் சில்வாவின் கருத்தை மறுதலித்தார் அமைச்சர் நலிந்த

மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு நிதி வரம்புகள் எதுவும் இல்லை என்றும், எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

திடீர் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் திறன் அரசாங்கத்திடம் உள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.

மாகாண சபை தேர்தல்களைச் சுற்றியுள்ள பிரச்சினை நிதி சம்பந்தப்பட்டது அல்ல, மாறாக தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை சம்பந்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

“புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியும்” எனவும் அவர் கூறினார்.

முன்னதாக, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா; ‘டித்வா’ பேரழிவு காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியவில்லை என்றும், தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி – பேரழிவு நிவாரணப் பணிகளுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்தக் கூற்றை நிராகரித்த அமைச்சர்; இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் பேசுகையில், ‘டித்வா’ பேரிடர் மீட்புப் பணிகளுக்காக ரூ. 500 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஒதுக்கீட்டில் சுமார் ரூ. 260 பில்லியன் இதுவரை செலவிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிதி இன்னும் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனர்த்த மீட்புப் பணிகள் தொடர்பான செலவினங்களால் மாகாண சபைத் தேர்தல்களுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார். திடீர் பொதுத் தேர்தல் உட்பட, தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் நிதி ரீதியாகத் திறன் பெற்றுள்ளதாக அவர் மீளவும் கூறினார்.

“பிரச்சினை நிதி சம்பந்தப்பட்டது அல்ல; நாடாளுமன்றத்தில் தேர்தல் முறைக்கு ஒப்புதல் அளிப்பதே பிரச்சினை. பாரம்பரியமாக, அனைத்து தேர்தல்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் நிதி தேவைப்பட்டாலும், அதை ஒரு உப மதிப்பீட்டின் மூலம் வழங்க முடியும். எனவே, நிதி ரீதியான தடை எதுவும் இல்லை,” என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

அனர்த்த முகாமைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட, தேர்தல் நடத்துவதற்கான செலவு கணிசமாகக் குறைவு என்றும், முதலில் 06 பில்லியன் ரூபாயாக இருந்த தேர்தல் செலவு, பின்னர் 10 பில்லியன் ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில், மதிப்பிடப்பட்ட அதிகபட்ச செலவு சுமார் 15 பில்லியன் ரூபாயாக உள்ளது.

டித்வா அர்த்தத்துக்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாயில், சுமார் 260 பில்லியன் ரூபாய் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. தேர்தல் முறைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடன், எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.