
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில், வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்ட 43 வயதுடைய நபர் ஒருவர் – நேற்று (30) இலங்கை திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கையை விட்டு பிரித்தானிய பிரஜாவுரிமையைப் பெற்றுச் சென்ற சந்தேகநபர், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதற்காக பணம் சேகரித்து கொழும்பு மற்றும் வன்னிப் பிரதேசங்களில் அவ்வாறான நிதிகளை விநியோகித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் நேற்று இலங்கை திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கிளிநொச்சியை பூர்வீகமாகக் கொண்ட 43 வயதுடையவராவார். அவர் தற்போது பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



