சமூக ஊடகங்களில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

🕔 June 4, 2024

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றினை சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, சமூக ஊடகங்களில் பரீட்சைப் பெறுபேறுகளைக் காட்சிப்படுத்துகின்றமை, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வாய்ப்பை மோசமாக பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பெறுபேறுகள் பகிரப்படும் போது – பெறுபேறுகளில் சுட்டெண் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்றவை தெரியப்படுத்தப்படும். அதன்போது எந்தவொரு நபரும் அவற்றினைப் பயன்படுத்த முடியும் என பேராசிரியர் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்றாம் தரப்பினர் – பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க இந்தத் தகவலைப் பயன்படுத்தலாம் என்றும், இதன் விளைவாக உண்மையான விண்ணப்பதாரர் விண்ணப்பித்து பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அத்தகைய சம்பவம் நடந்தால், முழு செயல்முறையையும் சரிசெய்த பின்னரே, உண்மையான விண்ணப்பதாரரை தெரிவு செய்ய முடியும், இதற்கு நீண்ட காலம் எடுக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் ஒருவரின் உயர்தரப் பெறுபேறுகளைப் பகிர்வதால் ஏற்படும் ஆபத்துக்களை மீண்டும் வலியுறுத்திய பேராசிரியர் அமரதுங்க, மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

2023 (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் முடிவுகள் மே 31 அன்று வெளியிடப்பட்டன.

பரீட்சைகள் திணைக்களத்தின் தகவல்களின் படி, பரீட்சைக்குத் தோற்றிய 269,613 பேரில் 173,444 விண்ணப்பதாரர்கள் (64.33%) பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்