மின்சாரம் தாக்கி கடந்த வருடத்தில் 50 யானைகள் பலி: சட்ட விரோத மின் வேலிகளால் ஏற்பட்ட பரிதாபம்

🕔 January 18, 2024

விவசாய நிலங்களை பாதுகாக்கும் வேலிகளுக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரம் வழங்கப்பட்டமையினால், கடந்த வருடத்தில் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான பொறியியலாளர் கே.ஏ. நொயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்; கடந்த வருடத்தில் பல்வேறு மனித நடவடிக்கைகளினால் மொத்தம் 474 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, யானைகளைக் கொல்ல சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக, மின்சார சபை ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது. மேலும் நாட்டிலுள்ள யானைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க மக்கள் ஆதரவை வழங்குமாறும் இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

இதன்படி, பயிர்ச்செய்கைகளைப் பாதுகாக்கும் வேலிகளுடன் மின்கம்பிகளை இணைப்பது தொடர்பில், நேரடியாக முறைப்பாடு செய்ய 1987 என்ற அவசர இலக்கத்தை இலங்கை மின்சார சபை வழங்கியுள்ளது.

Comments