நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது
– பாறுக் ஷிஹான் –
சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் – அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவாடிய குற்றச்சாட்டின் பேரில், கொக்குவில் பொலிஸார் கைது செய்த பின்னர், நீதிமன்ற வழக்கு விசாரணையினை அடுத்து – நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்புக்காக தங்க வைக்கப்பட்டிருந்த போது, இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர் – மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன்.
கடந்த புதன்கிழமை (29.112023) அதிகாலை 3.30 மணி அளவில் குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் – அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம், சிறுவனனின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் – பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல். றபீக் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஜனகீதன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், மேற்படி பாடசாலைக்குச் சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குறித்த சிறுவனை அன்று தாக்கினார் எனும் சந்தேகத்தில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் பெண் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைதான சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (2) இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
தனது மகனின் மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளை பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் தங்களுடைய பிள்ளைக்கு நடந்தமை போன்று, வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்றும் தந்தை கூறுகின்றார்.
மேலும், தனது மகனின் மரணத்தில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.