தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது

🕔 September 30, 2023

– சர்ஜுன் லாபீர் –

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் எதிர்வரும் ஒக்டோபர் 24,25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

ஒக்டோபர் 24ம் திகதி – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரஃப்பின் பிறந்த தினமாகும்.

பல்கலைக்கழகத்தின் 2004/2005 கலைப்பீட மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இன்று (30) பல்கலைக்கழக ஆற்றங்கரை முன்றலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்  போதே இந்த தகவலை அவர் கூறினார்.

அன்றைய தினம் சகல பீடங்களிலும் கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் கண்காட்சிகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெறும் எனவும் உபவேந்தர் குறிப்பிட்டார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடுவது இதுவே முதல் தடவையாகும்.

அத்தோடு ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் உள்ளடக்கிய ஒரு அமைப்பினையும் உருவாக்க இருப்பதாவும் உபவேந்தர் மேலும் கூறினார்.

இந் நிகழ்வில் கலை கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம். பாஸீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்