தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’

🕔 September 9, 2023

– நூருல் ஹுதா உமர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’ பற்றிய குறுங்காலக் கற்கைநெறியொன்றை இன்றும் (09) நாளையும் (10) கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைத்துகின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் நெறிப்படுத்திலில் நடைபெறும் இந்த குறுங்காலக்கற்கைநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று காலை நடைபெற்ற போது, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி ஜெஸ்ரி முஹம்மட் – நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் விளக்கமளித்தார்.

மேலும் நாடாளுமன்ற நிர்வாக பணிப்பாளர் ஜி. தட்சனாராணி – ‘நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகம்’ தொடர்பிலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் – ‘பிரதிநிதித்துவத்தில் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவம்’ தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

‘நாடாமன்ற ஜனநாயகம் -‘ஒரு கண்ணோட்டம்’ எனும் தலைப்பில் விரிவுரையை இரண்டாம் நாளான நாளை (10) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட அரசியல் விஞ்ஞானத் துறை தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பார் நிகழ்த்துவார்.

‘இலங்கை நாடாளுமன்றத்துக்கான டிஜிட்டல் அணுகுமுறை’ தொடர்பில் நாடாளுமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி ஜெஸ்ரி முஹம்மட் நிகழ்த்த உள்ளார், அதன் பின்னர், ‘இலங்கையில் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் ஆவண அமைப்பு’ தொடர்பில் நாடாளுமன்ற நூலகர் எஸ்.எல். சியாத் அஹமட் மற்றும் ‘சமூக ஊடகம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம்’ தொடர்பில் நாடாளுமன்ற ஊடக அதிகாரி நுஸ்கி முக்தார் ஆகியோர் விரிவுரை நிகழ்த்த உள்ளனர்.

இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.டீ. அஸ்ஹர் , துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்