நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட்

🕔 August 28, 2023

திகாரத்தில் இருக்கும் போது – மக்களுக்கு நாம் வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் தற்போது வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்றன எனவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் – முசலி வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார்.

“முசலி பிரதேசத்தில் குறுகிய காலத்துக்குள் நாம் பல பணிகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தமை வெளிப்படையானது. இந்த வைபவத்தில் பங்கேற்றிருக்கும் ஊர் கனவான்களுக்கு இந்த உண்மை தெரியும். அவர்களில் பலர் இதற்கு சாட்சிகளாகவும் உள்ளனர். முசலியில் வானளாவிய ரீதியில் உயர்ந்திருக்கும் மாடிக்கட்டிடங்கள், பாடசாலைகள், மக்கள் குடியிருக்கும் வீடுகள் மற்றும் இன்னோரன்னவை வானத்திலிருந்து திடீரென இறங்கியவை அல்ல.

பண்டாரவெளி, கொண்டச்சி, பொற்கேணி ஆகிய பாடசாலைகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட சாஹிரா, அல்ஜாசிம் ஆகியவை மிகவும் குறுகிய காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டவையே. அப்போது, இப் பாடசாலைகளை தடைகள், சவால்கள் மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் நாங்கள்  ஆரம்பித்த போது- மாணவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். முசலிப் பாடசாலையை தேசிய பாடசாலையாக ஆக்க வேண்டுமென நாங்கள் பகீரத முயற்சிகள் எடுத்தபோது, மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்தது. எனினும், விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தே அதில் நாம் வெற்றிபெற்றோம். அப்போது தேசிய ரீதியில் மூன்று பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அதில் முசலியும் ஒன்று.

நான் அமைச்சராக இருந்த போது, முசலிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மக்களுக்கு வழங்கியதால், வில்பத்துவை அழிப்பதாக என்மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது. வேறு மாவட்டத்தில் மரம் நட வேண்டும் என எனக்கெதிராக தீர்ப்பும் வந்தது. 1100 மில்லியன் ரூபாய்க்கு மரம் நட்டு, பத்து வருடங்களுக்கு அதை பராமரிக்கும் செலவுடன், மொத்தமாக 116 கோடி ரூபா செலுத்த வேண்டுமென தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்துள்ளேன். அது குறித்த வழக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நான் அமைச்சராக இருந்த காலத்தில், முசலிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கட்டிடங்களைப் பார்க்கும்போது, உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கின்றது. எனக்கு அந்த சக்தியை தந்த இறைவனுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி செலுத்துகின்றேன்.

நாங்கள் இந்தப் பிரதேசத்துக்குள் நுழையும் போது, நான்காம் கட்டையிலிருந்து சிலாவத்துறை வரை எங்குமே காடாகவே இருந்தது. மொத்தத்தில் முசலிப் பிரதேசம் முழுவதுமே வனாந்திரமாக காணப்பட்டது. நாங்கள் கால் வைக்கும்போது “கண்ணிவெடி அபாயம் இருக்கின்றது. கால்வைக்க வேண்டாம்” என பொலிஸார் எச்சரித்தனர்.”பாலைக்குளிக்கு செல்ல வேண்டாம்” என பொலிஸார் அறிவுறுத்தினர். இந்தப் பிரதேசத்தில் அநேகமான இடங்களில் குடியேற்றம் நடந்த பின்னர் இறுதியாகவே கொண்டச்சியில் மக்களை குடியேற்றினோம். கொண்டச்சி கிராமத்தில் உள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்ற விஷேட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி, எமது சொந்த நிதியில் கண்ணிவெடிகளை அகற்றி, மக்களை மீள்குடியேற்றினோம். சர்வதேச நிறுவனங்கள் பல இருந்த போதும், அவர்கள் கண்ணிவெடிகளை அகற்ற உதவி செய்யவில்லை. காணிகளை அபகரிக்கும் எண்ணமே அவர்களிடம் இருந்தது.

புதிய பாடசாலைகளை உருவாக்கினோம், ஆசிரிய நியமனங்களை வழங்கினோம், சதிகளுக்கும் தடைகளுக்கும் மத்தியிலேயே இந்தப் பணிகளில் வெற்றிபெற்றோம்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் அபகரிப்பு

கடந்த 3,4 வருடங்களாக நாம் மிகவும் அமைதியாக இருக்கின்றோம். எவராவது இந்தப் பணிகளை தொடரவேண்டுமெனவே விரும்புகின்றோம். எனினும், நாம் வழங்கிய காணிகளில் பல ஏக்கர்கள் தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை. பார்ப்பாரும் கேட்பாரும் அற்ற சமூகமாகவே இந்தப் பிரதேச மக்கள் வாழ்கின்றனர்.

அண்மையில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, ஆனால் முசலிப் பிரதேசத்தில் எதுவுமே விடுவிக்கப்படவில்லை. காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி கூறுகின்றார். 1984ஆம் ஆண்டுக்கு பின்னர், வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவித்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு அவர் கூறுகின்றார்.

அண்மையில் இடம்பெற்ற மன்னார் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், முசலிப் பிரதேசத்தில் ஒரு துண்டுக் காணியையேனும் விடுவிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பான நியாயத்தை நாம் தெரிவித்த போது, கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் 27ஆம் திகதி இதற்கென ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதைப்பற்றி பேசுவோம் என உறுதியளித்தனர். ஆனால், அவ்வாறு முடிவு எடுக்கப்பட்ட போதும் இங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் தலைமறைவாகிவிட்டனர். இதுதான் இன்றைய நிலை.   

முசலியில் உள்ள கல்விமான்களும் ஊர்மக்களும் இது தொடர்பில் பேச வேண்டும். இவற்றைத் தட்டிக் கேட்க வேண்டும். நிலத்துக்காகவே வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் நடைபெற்றன.

1990ஆம் ஆண்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபோது, 15 சதவீதக் காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்தது. தற்போது நாங்கள் மக்களுக்குக் கொடுத்த காணிகளைக் கூட மீண்டும் வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் 15 சதவீதமான காணிகளே மக்களுக்கு இருக்கின்றது. எஞ்சிய எல்லாவற்றையும் வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கின்றது. ஆனால், சிலர் இவற்றை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரதேச செயலாளர் இந்த அநியாயங்களை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவோம் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கின்றேன். உள்ளூர் அதிகாரிகளின் நிர்வாகக்கெடுபிடிகளால்தான் நமக்கு கஷ்டங்கள் தொடர்கின்றது என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்