சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு

🕔 June 7, 2023

– புதிது செய்தியாளர் –

“சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் – ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸாரை விசாரிக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு இருப்பதனால் – பொலிஸார் விசாரணைகளை பக்கச்சார்பாக முன்னெடுத்து, தம்மீது அடக்குமுறையை  பிரயோகிக்கின்ற வகையிலேயே தனது கைது இடம்பெற்றதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதனை நீதிமன்றுக்கு தாம் மிகத் தெளிவாக தெரியப்படுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். 

அந்த அடிப்படையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகள் மட்டத்தில் விசாரணை  முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நீதிமன்றில் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கையில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக – தமிழ் மக்கள் மீது இன வன்முறைகளை பிரயோகித்து வருகின்ற முப்படையினரில் பொலிஸாரும் உள்ளடங்குகின்றனர். ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை அரசு முன்வராது. எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என்பதற்கு எனது கைது நல்ல ஒரு உதாரணமாகும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் நாடாளுமுன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் விடுவிக்கப்பட்டதோடு, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையினையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

தொடர்பான செய்தி: கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்