மூன்று நோய்கள் குறித்து எச்சரிக்கை

🕔 May 4, 2023

டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

தாம் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து – மக்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

டெங்கு, மலேரியா மற்றும் எலிக் காய்ச்சல் ஆகிய நோய்களும் தற்போது அதிக அளவில் அதிகரித்துள்ளன.

எனவே, 48 மணி நேரத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் 30,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், மழைக்காலத்தில் எலிக்காய்ச்சலால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, இரண்டு பருவ மழைகளைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் உச்சத்தை அடைவதால், பருவகால மாறுபாட்டால் நோய் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகிறது.

இந்த சூழலில், உள்ளங்கால் அல்லது கால்களில் காயங்கள் வெளிப்பட்டால், தண்ணீர் அல்லது சேற்றில் இறங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல், தசைவலி, நிறம் மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அரச மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மலேரியா எதிர்ப்பு பிரசாரத்தின் பணிப்பாளர், வைத்தியர் சம்பா அலுத்வீர கூறுகையில், மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது என்றார்.

2022 இல் மொத்தம் 37 மலேரியா நோயாளிகள் பதிவாகினர். இருப்பினும், ஜனவரி 2023 முதல் 17 மலேரியா நோயாளிகள்பதிவாகி உள்ளனர். அனைத்து நோயாளிகளும் வெளி நாடுகளில் இருந்து திரும்பியவர்களாவர்.

அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த ஒருவர் – மலேரியா நோயினால் உயிரிழந்துள்ளதாக, தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்