தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

🕔 February 19, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காலத்தில், பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்டிருந்த போதிலும், வாக்களிப்பு பிற்போடப்பட்டமையால் கோரப்பட்ட வேட்பு மனுக்களுக்கே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நிதி இல்லாத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உறுதியளித்தவாறு நடத்த முடியாமல்போகும் நிலை ஏற்படும் என நாளை அல்லது நாளை மறுதினம் மனு ஒன்றின் மூலம் உச்ச நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரியவாறு நடத்த நடவடிக்கை எடுப்பதாக, தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி உறுதிமொழியை வழங்கியிருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டது.

இருந்தபோதிலும் அந்த உறுதிமொழிக்கு அமைய நடவடிக்கை எடுப்பதற்கு இதுவரையில் நிதி கிடைக்கப்பெறவில்லை என, மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்த தேர்தல் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு விட்டன

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக 10 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுவிட்டதாக அரச அச்சகத் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், மறைகரங்களின் காரணமாக, அச்சிடல் பணிகளின் முன்னேற்றம் மந்தமாக உள்ளதாக அந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அசங்க சந்தருவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்னும் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுகின்றன.

அந்தவகையில், வரலாற்றில், வாக்குச் சீட்டு அச்சிட இவ்வளவு காலம் எடுத்ததில்லை என்று, அரச அச்சகத் திணைக்களத்தின் தொழிற்சங்கத்தின் செயலாளர் அசங்க சந்தருவன் தெரிவித்துள்ளார்.

“அச்சிடுவதற்கு போதுமான பொருட்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் திணைக்களத்திடம் இருக்கின்றனர்”.

இந்தநிலையில், தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கில், வாக்குச் சீட்டு அச்சிடுவதைத் தாமதப்படுத்தும் வகையில், சில சக்திகள் அச்சகத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது வெளிப்படையானது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்