கடலில் 15 நாட்களாக காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள், படகுடன் மீட்பு
🕔 October 13, 2022




– பாறுக் ஷிஹான் –
கல்முனையிலிருந்து மீன் பிடிப்பதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கடலுக்குச் சென்று காணாமல் போனதாகக் கூறப்பட்ட 04 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்டட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
கல்முனையில் இருந்து கடந்த மாதம் 26ஆம் திகதி ஆழ்கடல் மீன் பிடிப்பதற்காகச் சென்ற 4 மீனவர்கள், 15 நாட்கள் கடந்தும் இன்னும் வீடு திரும்பாத நிலையில், மேற்படி ஆறுதலான செய்தியை உதவிப் பணிப்பாளர் றியாஸ் கூறினார்.
காணாமல் போண மீனவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டு சொந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து தகவல்கள் கிடைக்காமல் இருந்தன.
கல்முனையை சேர்ந்த எம்.ஐ.எம். மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம். நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி. கபீர் (வயது 50), எம்.என். ஹில்மி (வயது 33), ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமல் போய் இருந்தனர். அவர்கள் சென்ற படகின் ஜிபிஸ் தொழிநுட்ப கருவி பழுதடைந்தமையினால் படகு திசை மாறி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு திசை மாறி தத்தளித்த குறித்த படகினை, மீனவர் ஒருவர் கண்டு கடற்படையினருக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய மீட்பு நடவடிக்கை உள்ளுர் மீனவரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு, மீனவர்கள் உள்ளிட்ட படகு வாழைச்சேனை துறைமுகத்துக்கு இழுத்து வரப்பட்டது.
மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.
இம்மீட்பு நடவடிக்கையில் கடற்படை, மீன்பிடி திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் படகுகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.


Comments



