மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார்
– அஹமட் –
இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான புவனலோஜனி இன்று (03) யாழ்ப்பாணத்தில் காலமானார்.
இவர் – மூத்த ஒலிபரப்பாளர் காலஞ்சென்ற நடராஜசிவம் அவர்களின் மனைவியாவார்.
இலங்கை வானொலியில் புகழ்மிக்க அறிவிப்பாளராக பல தசாப்த காலங்கள் புவனலோஜனி கோலோச்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி, எழுத்துத் துறையிலும் இவர் அறியப்பட்டிருந்தார். புவனலோஜனி எழுதிய பல சிறுகதைகள் வீரகேசரி உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.
சூரியன் எப்.எம் வானொலியின் ஸ்தாபக முகாமையாளர் நடராஜசிவம் – அங்கு பணியாற்றிய காலத்தில், திறமையுள்ள பலரை இனங்கண்டு, அந்த வானொலிக்கு அறிவிப்பாளர்களாக சேர்ப்பதில் புவனலோஜினி பின்னணியில் இருந்து ஆற்றிய பங்கு அளப்பரியதாகும்.
சூரியன் எப்.எம் வானொலியின் ஒலிபரப்பு தொடங்கப்பட்டபோது, அந்த வானொலியின் ‘கருப்பொருள்’ பாடலான (Theme song) ‘தங்கச் சூரியனே’ எனும் பாடலை, இசைத் தட்டை ஒலிக்க விட்டு ஆரம்பித்து வைத்தவர் புவனலோஜனி என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.