அரசியல் அயோக்கியத்தனம் குறித்து, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விளக்கம்

🕔 December 14, 2021

– நூருல் ஹுதா உமர் –

பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தாளுவதற்கான சதிகளை தொடர்ச்சியாக சிலர் செய்து வருகின்றனர் என்று, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார்.

“உணர்ச்சி அரசியலை நாங்கள் செய்வதற்கு முற்பட்டால் நம் சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எங்களுக்குள்ளது. நாங்கள் எங்கள் தலையை அடமானம் வைத்துத்தான் சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம்” எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் 2021ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட அலுவலக பாவனை பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை – அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மதஸ்தலங்கள், கழகங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (13) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“முஸ்லிம் சமூகத்துக்குள் வாக்குகளுக்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை. நாட்டில் வாழும்20 லட்சம் முஸ்லிம்களின் நலன் கருதியே 10 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.

பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தாளுவதற்கான சதிகளை தொடர்ச்சியாக சிலர் செய்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலையை தோற்றுவிக்கும். இந்நிலையை முதலில் மாற்றியமைக்க வேண்டும். அரச உயர் பதவிகளிலில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இதன் உண்மைத் தன்மை நன்றாக விளங்கும்.

அடுத்த தேர்தலை வைத்து நாங்கள் அரசியல் செய்வதாக இருந்தால் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வெறும் வெற்றுக் கோசத்தோடு மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வீதியில் நின்றாலே மக்கள் எம் பின்னால் அணி திரள்வார்கள். இந்த அரசியலை நாங்கள் செய்வதற்கு முற்பட்டால் நம் சமூகத்துக்கு ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எங்களுக்குள்ளது.

நாங்கள் எங்கள் தலையை அடமானம் வைத்துத்தான் சமூகத்துக்கான அரசியலை செய்து வருகிறோம். எங்கள் முடிவுகள் பல வெற்றிகளை சமூகத்திற்காக பெற்றுத் தந்ததுள்ளது.

ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் நம் சமூகத்தில் தேங்கி கிடக்கின்றன. இவற்றுக்கான தீர்வை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். அதை விட்டு விட்டு – மக்களை பலிக்கடாவாக்கி நாம் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பது பெரும் அயோக்கியத்தனமானதாகவே நாங்கள் பார்க்கிறோம். மருந்து கசப்பானதுதான் அதை பருகுவதன் மூலமே நமக்கு பிடித்த நோய் நம்மை விட்டு பிரியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்