
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராாக கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரதூரமான ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீரின் ஆலோசனை வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலுக்கு இணங்க ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளார்.
ஏழைக் குடும்பம் ஒன்றுக்கு கம்பெரலிய திட்டத்தின் கீழ் வீட்டுக்கூரை நிர்மாணிப்பதற்கு வழங்கிய 60 ஆயிரம் ரூபா பணத்தை, பலாத்தகாரமாக மீளப்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம், அந்தப் பணத்தை பிரதேச செலயத்தின் நிதிப் பிரிவில் ஒப்படைக்காமல் சுமார் இரண்டரை மாதங்கள் தனது வசம் சட்டவிரோமான முறையில் வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக அட்டாளைச்சேனை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இயங்கிவரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வரும் மோசடிகள் குறித்தும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு பலமுறை பலர் முறையிட்டும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாமையினை அடுத்தே, தற்போது லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல் அஸ்லம் என்பவர், ஏழைக் குடும்பம் ஒன்றிடமிருந்து பலாத்காரமாக மீளப் பெற்ற பணத்தை எவ்வாறு மோசடி செய்தார் என்பதையும், அதனை சமூக ஆர்வலர்களின் உதவியுடன் ‘புதிது’ செய்தித்தளம் எவ்வாறு புலனாய்வு செய்து கண்டுபிடித்தது என்பதையும், அதனையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்து தொடர்பிலும் இன்று சனிக்கிழமை இரவு ‘புதிது’ செய்தித்தளம் விரிவாக வழங்கவுள்ளது.
மேலும் இந்த மோசடியை மறைக்க எவ்வாறான நடவடிக்கைகளை எல்லாம் சம்பந்தப்பட்டோர் எடுத்தனர் என்பதையும் ‘புதிது’ செய்தித்தளம் அம்பலப்படுத்தவுள்ளது.
காத்திருங்கள்.
தொடர்பான செய்தி: கொடுத்த நிதியை மீளப் பெற்று, சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்



