காடைத்தனங்களில் ஈடுபடுவோர் மீது, துப்பாக்கி பிரயோகம் செய்ய உத்தரவிடுங்கள்: பிரதமரிடம் றிசாட் கோரிக்கை

🕔 May 13, 2019

டமேல் மாகாணத்தின் குருநாகல், நாத்தாண்டிய, குளியாப்பிட்டிய, நிக்கவெரட்டிய, அனுக்கன ஆகிய பிரதேசங்களில் மீண்டும் காடையர்கள் மேற்கொண்டுவரும் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டு வர, இறுக்கமான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று திங்கட்கிழமை மாலை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார்.

ஒரு குறிப்பிட்ட காடையர் கூட்டமே,   மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய ரக வாகனங்களில் வந்து முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் தமது காடைத்தனங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், சில இடங்களில் பொலிஸார் பார்த்திருக்க பள்ளிவாசல்கள், கடைத்தொகுதிகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் வருவதாக பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்த பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் வீடுகளுக்குள்ளே மிகவும் அச்சத்துடன் இருப்பதாகவும், சில பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களிலே தஞ்சம் அடைந்திருப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

காடைத்தனங்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்குவது அரசாங்கத்தின் கடமையென்றும், பாதுகாப்புப் படையினருக்கும் பொலிஸாருக்கும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கி காடையர்களின் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அவசரகாலச் சட்டத்தின் விதிகளையும் மீறி இந்த காடையர் கூட்டம் சட்டத்தை கையிலெடுத்து மனம் போன போக்கில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இனியும் படையினர் அனுமதிக்க இடமளிக்க வேண்டாமெனவும் அமைச்சர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்