கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி, மதுஷ் குழுவுடன் தொடர்பு: நடக்கிறது விசாரணை

🕔 February 25, 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா –

மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் கைது தொடர்பான தகவல்களை தொடர்ந்து நான் எழுதுவது குறித்து பலர் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

பெரும்பாலான நண்பர்கள் எனது பாதுகாப்பு குறித்து கரிசனை தெரிவித்தனர். பலர் தொடர்ந்து எழுத ஆர்வமூட்டினர்.

ரிஸ்க் & ரஸ்க்

நான் எதனையும் இட்டுக்கட்டி எழுதவில்லை. கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்தி எழுதுகிறேன். இது மதுஷ் தரப்புக்கோ அல்லது பாதுகாப்பு தரப்புக்கோ சாதகமாக எழுதப்படும் பதிவல்ல.

எஸ்.பி. திசாநாயக்க – நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்த காலத்தில், சிறைக்குள்ளே சென்று அவரை பேட்டி எடுத்து வந்த அந்த நேரத்திலும் எனக்கு அழுத்தங்கள் வந்தன.

ஆனால் எழுதவேண்டுமென தீர்மானித்தால் எப்படியாவது எழுதியே தீருவேன்.

‘ஜேர்னலிசம்’ என்பது ‘திரில்’லாக இருக்கவேண்டும்.

இந்த இயந்திரமயமான வாழ்வில் பலருக்கு மறுநாள் பேப்பர் எடுத்து வாசிக்கும் அளவுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. அந்த பலருக்காக – எனது வேலைகளுக்கு மத்தியிலும் இதை எழுதுகிறேன். எனக்கு கிடைக்கும் செய்திகளை உடனே எல்லோருக்கும் பகிர அவா.

ஒரு தமிழ் அரசியல் கட்சியின் தொண்டர்கள், அந்தக் கட்சியின் தலைவரை இந்த தொடர் மூலம் – நான் இகழ்ந்ததாக உள்பெட்டியில் என்னிடம் கூறினர்,குறைபட்டனர்.

“தலைவர் போதைப்பொருள் பரிசோதனை செய்து சுத்தவாளி என்று காட்டினால் மீடியாவை விட்டே போய்விடுவீர்களா” என்று இடையில் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டார்.

“அப்போ தொடர்ந்து நான் மீடியாவில் எழுதப்போகிறேன், நன்றி” என்றேன் நான்.

சரி விடயத்துக்கு வருவோம்.

முஸ்லிம் அரசியல்வாதி

மதுஷின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லவா ? அவர்களிடம் இருந்து பல தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து அவை குறித்தும் விசாரணைகள் நடக்கின்றன.

மதுஷ் குரூப்புடன் கொழும்பில் உள்ள முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது. அவர் பற்றி ஆராயப்படுவதால், மேலும் விபரங்களை வெளியிட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் விரைவில் ஒரு ‘க்ளூ’ தருவேன்.

இதற்கிடையில் டுபாயில் கைது செய்யப்பட்ட மதுஷின் சகாக்கள் பலர் சிறையில் இருந்து உறவினர்களிடம் பேச வேண்டுமென கூறி, அவர்களின் சகாக்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளமையும் இப்போது அறியக்கிடைத்துள்ளது.

மௌனம் காக்கும் மதுஷ்

அப்படி பல முக்கியஸ்தர்கள் தமது சகாக்கள் பலருடன் பேசினாலும், மாக்கந்துர மதுஷ் அப்படி தொடர்பு கொண்டதாக தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தேடிய பொலிஸாருக்கு இன்னுமொரு தகவல் கிடைத்தது.

அதாவது , மாக்கந்துர மதுஷ் எப்போதும் யாரின் தொலைபேசி இலக்கங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளாமல், புத்தகம் ஒன்றின் உதவியுடன்தான் தொலைபேசி எண்களை அதில் குறிப்பிட்டு தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

கைத்தொலைபேசியில் விபரங்களை சேமித்து வைத்து, அது பாதுகாப்பு தரப்பிடம் சிக்கினால் ஆபத்து. அடிக்கடி புதிய புதிய தொலைபேசி இலக்கங்களை தனது சகாக்கள் பயன்படுத்துவதால், புத்தகம் ஒன்றில் குறிப்பிடுவது நல்லது. புத்தகத்தில் தொலைபேசி இலக்கங்களை எழுதும்போது தனக்கு மட்டுமே விளங்கும் பல குறியீடுகளை வைத்து எழுதிக் கொள்வது – பாதுகாப்பு தரப்பிடம் சிக்கினால் கூட அவர்கள் இதனை பெரிதாக எடுக்க மாட்டார்கள். இவை போன்ற பல காரணங்களினால், மதுஷ் அப்படி எழுதிவைப்பதாக தெரியவந்துள்ளது.

அதனால் முக்கியமான பல நபர்களின் தொலைபேசி இலக்கங்களை, மதுஷினால் நினைவு கொள்ள முடியாமல் இருக்கலாமென பாதுகாப்பு தரப்பு கருதுகிறது.

ஆனால் அவர் சிலரின் இலக்கங்களை நினைவு வைத்திருந்தாலும், தனது ‘நெட்வெர்க்’கை பாதுகாக்க இப்படி பேசாமல் இருக்கலாமென இன்னொரு பாதுகாப்பு தரப்பு கருதுகிறது . உண்மை பொய் பின்னரே தெரியவரலாம்.

டுபாயிலிருந்து வந்த 294

நேற்று கொழும்பில் 294 கிலோ ஹெரோயின் மீட்கப்பட்டதல்லவா? அது டுபாயில் இருந்து அனுப்பப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது மதுஷ் தரப்பினால் அனுப்பப்பட்டதா என்பது பற்றி ஆராயப்படுகிறது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், டுபாயில் இருந்து தனது உறவினர் ஒருவரே இதனை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

சொகுசு வர்த்தக கட்டிடங்களின் வாகன தரிப்பிடத்தில், டுபாய் உறவினர் சொல்லும் வாகனங்களை கொண்டு போய் தரித்துவிட்டு வருவது மட்டுமே தனது வேலை என்றும், அதற்காக பணம் கிடைக்கிறதேயொழிய அதற்கப்பால் என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாதென அந்த கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் மதுஷுக்கு எதிரான கோஷ்டி இதனை திட்டமிட்டு அனுப்பி, இவ்விவகாரத்தையும் மதுஷ் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி அவரை மேலும் இறுக்கும் பொறியாகவும் இருக்கலாமென, இன்னுமொரு தகவல் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

தலையிடி கொடுக்கும் தாவூத் இப்ராகீம்

பாகிஸ்தானிலுள்ள தாவூத் இப்ராகீம் தரப்புடன் கொடுக்கல் வாங்கல் காரணமாக, மதுஷ் கொண்ட பகைமையே அவருக்கு இப்போது பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மதுஷ் மற்றும் சகாக்கள் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுவும் டுபாய் பொலிஸில் உள்ள, நீதிமன்ற தொடர்பாடல் அதிகாரி தீர்மானித்தால் மட்டும். ஏனெனில் விசாரணைகள் – மருத்துவ ஆய்வு அறிக்கைகள் எல்லாம் சரியாக வந்துள்ளதா என்பதை அவர் பூரணமாக ஆராய்ந்த பின்னரே அதனை தீர்மானிப்பார்.

மறுபுறம் அன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தங்களது நிலைப்பாட்டை எழுத்துமூலம் முன்வைக்க வேண்டும். அங்கு சட்டத்தரணிகள் ஆஜராக வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் அனுமதிக்கடிதம் மற்றும் இலங்கையில் உள்ள டுபாய் தூதரகத்தில் அதனை உறுதிப்படுத்தும் கடிதம் என்பன தேவை. இப்போதைக்கு அமல் மற்றும் அவரது மகன் நதிமாலுக்கு மட்டுமே அந்த அனுமதிக் கடிதம் கிடைத்துள்ளது.

ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் ஏற்கனவே டுபாய் சிறைகளில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 600 பேர் நீண்டகாலம் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. யாரின் அவசரத்துக்கும் ஏன் இலங்கை அரசின் அவசரத்துக்கு கூட, தனது விசாரணைகளை டுபாய் துரிதப்படுத்தாது.

தள்ளாடும் சந்தை

இவ்வருடம் இதுவரை 520 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதால், இலங்கை போதைப்பொருள் சந்தையில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொழும்பில் மட்டும் சுமார் இரண்டரை லட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக, பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் சொல்கின்றன. இவர்களில் விவிஐபி களும் அடக்கம்.

டுபாயில் கைது செய்யப்பட்ட ஒருவரின் கொழும்பு வீட்டுக்கு சென்ற விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் உள்ளதை கண்டறிந்து கவலைப்பட்டதாக தகவல்.

மதுஷ் தொடர்பான முன்னைய பதிவு: மதுஷின் போதைப் பொருள் விநியோகத்துக்கு பொறுப்பான நபர், பொட்டு அம்மானின் உறவினர்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்