ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி

🕔 April 25, 2018

– முஸ்ஸப் அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நண்பகல் கண்டனப் பேரணியொன்றில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் காஷ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷிபா பானு எனும் சிறுமியொருவரை பல நபர்கள் சேர்ந்து வன்புணர்வுக்குட்படுத்தி, கொலை செய்தமையினைக் கண்டிக்கும் வகையிலேயே இந்தக் கண்டனப் பேரணி இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்டனப் பேரணியில் சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் மீதும் குறிப்பாக சிறுமிகள் மீதும் மேற்கொள்ளப்படும் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக இதன்போது பேரணியில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பியதோடு, ஆஷிபா தொடர்பில் குற்றம் புரிந்த அனைவரும் தண்டிக்கப்படவேண்டுமெனவும் வலிறுத்தினர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக வளாகத்திலிருந்து ஆரம்பமான மேற்படி பேரணியானது, முன்றல் வரை சென்றடைந்தது. இதன்போது, கண்டனப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்தனர்.

ஆஷிபாவை கொன்றவர்கள் ஒருபோதும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடக் கூடாது என்றும், குற்றவாளிகளைத் தண்டிப்பதில் இந்திய அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் இங்கு ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மாணவரொருவர் கூறினார்.

பேரணியின் இறுதியில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகளுக்கு எழுதப்பட்ட மனுவொன்றினை, அவருக்கு அனுப்பி வைக்குமாறு கூறி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை தலைவர் கலாநிதி ரமீஸ் அபூபக்கரிடம்  மாணவர்கள் கையளித்திருந்தனர்.  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்