பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு

🕔 April 4, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட பொத்துவில் கூட்டத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக  மாற்றுக்கட்சி ஆதரவாளவர்கள் பொய்யான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பிவருகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றிலேய, இந்த மறுப்பு வெளிபிடப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது;

‘ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட பொத்துவில் கூட்டத்தில் கல்வீச்சு’ என்று வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. பிரதி அமைச்சர் பைசால் காசிம் மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோர் உரையாற்றக்கூடாது என்று சிலர் கூக்குரலிட்டார்களே தவிர, கூட்டத்தில் எந்த கல்வீச்சும் நடத்தப்படவில்லை.

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 03 மாடிக் கட்டிடம் அமைப்பதற்கு பைசால் காசிம் தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அடிக்கல் நாட்டுவதற்காக மு.கா. பிரதிநிதிகள் குறித்த இடத்துக்கு வருகைதந்தபோது, வீதியின் மறுமுனையிலிருந்த மாற்றுக்கட்சிக்காரர்கள் ஐந்தாறு பேர், இங்கு வரக்கூடாது என்று கூச்சலிட்டனர். அதனை யாரும் பொருட்படுத்தவில்லை.

அடிக்கல் நாட்டுவது 04 மாடிக் கட்டிடம் என்றே வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் நம்பியிருந்தனர். பதாதையிலும் 04 மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா என்றுதான் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அதற்கு நிதியொதுக்கிய பிரதியமைச்சர் பைசால் காசிம், அது 04 மாடிக் கட்டிடம் அல்ல 03 மாடிக் கட்டிடம் என்பதை தெளிவுபடுத்தினார். இதன்போது ஏற்பட்ட சலசலப்பினால் பைசால் காசிம் தகாத வார்த்தையினால் பேசியதாகக்கூறி, ஏற்கனவே குழப்புவதற்கு காத்திருந்தவர்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.

ஏறத்தாழ பத்துப் பேரடங்கிய மாற்றுக்கட்சி குழுவினர், கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என்று கூச்சலிட்டுக்கொண்டு திரிந்தனர். இதனையடுத்து பிரதி அமைச்சருக்கு எதிராக செயற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கூட்டம் நடந்தது.

ஆதார வைத்தியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்களை விளித்து பிரதி அமைச்சர் பைசால் காசிம் கடுமையாக நடந்து கொண்டதை காரணம்காட்டி, கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அதில் அவர் பேசக்கூடாது என்றும், ஆசிரியர் இடமாற்றம் செய்து கொடுக்காத காரணத்தினால் மாகாணசபை உறுப்பினர் தவம் பேசக்கூடாது என்றும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேசக்கூடாது என்று அங்கு யாருமே கூறவில்லை.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த மைலன் பழைய தியேட்டர் முன்றலுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்றபோது பட்டாசு கொளுத்தி வரவேற்கப்பட்டார். பின்னர் அவர் உரையாற்றும்போதும் பட்டாசு கொளுத்தப்பட்டது. பிரதி அமைச்சர் பைசால் காசீம் மற்றும் மாகாணசபை உறுப்பினர் தவம் ஆகியோரை பேசவிடாது தடுத்தமை பற்றியும் ரவூப் ஹக்கீம் தனதுரையில் பிரஸ்தாபித்திருந்தார். இந்த உரையை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் அமைதியாக செவிமடுத்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி திட்டங்களுக்காகவும், பொதுக்கூட்டத்தை நடாத்தும் நோக்கிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஏனைய முக்கியஸ்தர்களும் பொத்துவிலுக்கு சென்றபோது, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் சார்பான குழுவொன்று அதனைத் தடுப்பதற்கு பல வழிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தது.

பொத்துவில் செங்காமம் பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் பகற்போசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வருகைதந்த பொத்துவில் உலமா சபையின் தலைவர் ஆதம்பாவா மௌலவி, முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தங்களது பிரதேசத்துக்கு அரசியல் பிரதிநிதித்துவமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அவ்வாறிருக்க, அவருக்குத் தெரியாமலேயே உலமா சபையின் கடிதத் தலைப்பில் பொத்துவில் கூட்டத்தை பகிஷ்கரிக்குமாறு அறிக்கையொன்று வெளியாகியிருந்தது.
இதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஆதம்பாவா மௌலவி, கூட்டத்தைக் குழப்புவதற்கு ஒரு கூட்டம் அலைந்து திரிவதாகவும், உலமாசபைத் தலைவர் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசிக்கொண்டிருப்பதாக படத்துடன் அறிக்கை விடுமாறும் தெரிவித்தார்.

இவ்வாறு செயற்பட்டுக்கொண்டிருந்த மாற்றுக்கட்சி குழுவினரே கூட்டத்தைக் குழப்புவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். இருப்பினும் தடைகளைத் தாண்டி கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

ஆசிரியர் குறிப்பு: 

01) பொத்துவில் வைத்தியசாலைக்கு 04 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல்தான் நாட்டப்பட்டதாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்து நாம் செய்தி வெளியிட்ட பின்னர், 03 மாடி என திருத்தப்பட்டது.

02) பொத்துவில் கூட்டத்தில் பேசிய மு.கா. பிரமுகர்களே தமது உரையில், கல் வீசுவதென்றால் வீசுங்கள் ஆனால் எமது உரையை கேட்டு விட்டு வீசுங்கள் என்று, கேட்டுக் கொண்டனர்.

இவற்றினை நிரூபிக்கும் வகையில், புதிது வெளியிட்ட செய்திகள்:

01) ஹக்கீம் கலந்து கொள்ளும், பொத்துவில் கூட்டத்துக்கு கல்வீச்சு; பேச்சாளர்கள் கெஞ்சியும், எதிர்ப்பு தொடர்கிறது

02) கடல் நீரை சுத்தப்படுத்தியேனும் பொத்துவிலுக்கு குடிநீர் தருவேன்; மு.கா. தலைவரின் ஏப்ரல் ஃபூல் தின வாக்குறுதி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்