பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு; பெருமையடைகிறது அக்கரைப்பற்று

🕔 November 3, 2016

nawas-sp-011யங்கரவாத விசாணைப்பிரிவில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து வந்த முகம்மட் அலியார் நவாஸ், தற்போது பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவருக்கான பதவி உயர்வு கடிதம் கடந்த வாரம் வழங்கி வைக்கப்பட்டது.

33 வருட பொலிஸ் சேவையில் இவர் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இப்பதவி உயர்வு இவருக்கு கிடைத்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் முகம்மது அலியார் , பரீதா உம்மா ஆகியோரக்கு சிரேஷ்ட புதல்வராக பிறந்த இவர், தனது ஆரம்ப கல்வியை அக்கரைப்பற்று அஸ்-ஸாஹிரா வித்தியாலயத்திலும், உயர் தரத்தை அக்ரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் பயின்றார். அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் முதலாவது நிரந்தர உப பொலிஸ் உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்டு 1984ஆம் ஆண்டு பொலிஸ் துறையில் இணைந்தார்.

இவர் கல்முனை, கல்கிஸ்ஸ, கொஹூவல மற்றும் பண்டாரவளை போன்ற பிரதேசங்களின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் பொலிஸ் நிலையங்களின் மேற்பார்வை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவு, பொலிஸ்மா அதிபர் காரியாலயம் போன்றவற்றிலும் கடமை புரிந்துள்ளார்.

இவர் கல்முனை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக கடமைபுரிந்த நேரத்தில் கல்முனை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிவாரியான குழப்ப நிலையை சுமூகமாக தீர்த்து வைத்தமையினால் இன்றும் அம்மக்களினால் மதிக்கப்படும் ஒருவராகவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணியில் கடமைபுரிவதற்காக தெரிவு செய்யப்பட்டு 2005 – 2006 காலப்பகுதியில் சூடானில் பணிபுரிந்தார். அத்துடன் இந்தியா, தாய்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பொலிஸார் தொடர்பான சர்வதேச மாநாடுகளிலும் பங்குபற்றியுள்ளார்.

உலக நாடுகளின் மனித உரிமைகளின் முன்னேற்றம் தொடர்பாக நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, இலங்கை சார்பாக சென்ற குழுவில் இவரும் அங்கத்துவம் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

பொலிஸ் திணைக்கள சட்டப்பிரிவில் 13 வருடங்கள் கடமையாற்றிய இவர், பதில் பணிப்பாளராகவும் நீண்ட காலம் செயற்பட்டுள்ளார்.

தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்துவந்த இவருக்கு, பொலிஸ் அத்தியட்சகர் பதவி உயர்வு கிடைத்துள்ளதுடன் பயங்ரவாத பிரிவின் பதில் பணிப்பாரளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் பட்டமேற் பட்டப்படிப்பையும், மனித உரிமைகள் முதுமானி பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். மனித உரிமைகள் முதுமானி பட்டத்தைப் பெறுவதற்கு பொலிஸ் காவலில் சந்தேக நபர்கள் மீதான சித்திரவதை என்ற முக்கிய விடயத்தை ஆய்வு செய்து சமர்ப்பித்தார்.

விளையாட்டுத் துறையிலும் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், அம்பாரை மாவட்டத்தில் பல விளையாட்டு கழகங்களில் அங்கத்துவம் வகித்தள்ளதுள்ளதுடன், அக்கரைப்பற்று கால்பந்தாட்ட சம்மேளனத்தை உருவாக்கி அதன் ஸ்தபாக தலைவராகவும் செயற்பட்டார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து 1980ஆம் ஆண்டு பேங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச ரீதியான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியிலும் விளையாடினார். இவருடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மற்றுமொரு பிரபல்ய கால்பந்தாட்ட வீரர் தற்போது அதிபராக உள்ள ஏ.ஜி. அன்வரும் விளையாடியிருந்தார்.

இவர் தற்போது இலங்கை தேசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தில் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார்.

தற்போது 55 வயதாகும் இவருக்கு மூன்று பிள்ளைகளும் மூன்று பேரப்பிள்ளைகளும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்