– எம்.வை. அமீர் –
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப் பல்கலைக்கழகத்தின் முன்னைய உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உபவேந்தராக பேராசிரியர் நாஜிம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் பதவி வகிக்கவுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், அதற்காக 15 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
குறித்த விண்ணப்பதாரிகளில் 13 பேர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை முன்பாக தோன்றி, அவர்கள் சார்ந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தனர். இதற்கிணங்க – இவர்களில் மூவர், பேரவையால் தெரிவுசெய்யப்பட்டு, ஜனாதிபதியின் சிபாரிசுக்காக அவர்களின் பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, பேராசிரியர் நாஜிம் – புதிய உபவேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட, சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவப் பேராசிரியரான நாஜீம் – காலியை பிறப்பிடமாக கொண்டவராவார்.
கல்வித் துறையில் குறிப்பிடத்தக்கவராவும், சிறந்ததொரு நிருவாகியாகவும் திகழும் பேராசிரியர் நாஜீம் – பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



