காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ்

🕔 August 26, 2016
Hisbullah - 75யுத்தகாலப்பகுதியில் காணாமல்போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நாடாளுமள்றில் கோரிக்கை விடுத்தார்.

காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகள் வடக்கு, கிழக்கில் மட்டுமின்றி முழு நாட்டிலும் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லீம்கள்  என்ற வேறுபாடின்றி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல்போனவர்கள் – இறந்தவர்களுக்கான பதிவு சான்றிதழ் வழங்குவது தொடர்பான தற்காலிக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நேற்று  வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர்  தொடர்ந்து உரையாற்றுகையில்;

”ஹஜ் கடமையை நிறைவேற்றி காத்தான்குடி திருப்பிக் கொண்டிருந்த 150 முஸ்லிம் யாத்திரிகர்கள் குருக்கல்மடம் பகுதியில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பிலும் மீள்பரிசீலனை- விசாரணை செய்யப்பட வேண்டும்.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் யூ.எல். தாவூத் சேர், ஓட்டமாவடி தவிசாளர் புகாரி விதானே போன்ற சமூகத்தின் முக்கியமானவர்கள் பலர் கடத்தப்பட்டனர். அதுமட்டுமன்றி ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 150 மேற்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டனர். அவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது என எந்தத் தகவலும் இல்லை.

இவ்வாறு யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் – காணாமல்போயுள்ளனர். இவர்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளோ – தீர்மாங்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. எனவே, இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்