நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட மெளலவிகளான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம். இல்யாஸ் ஆகியோர், தமது இடைநிறுத்தம் தொடர்பில் நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு தமது இடைநிறுத்தம் தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கட்சியின் யாப்பில் அல்குர்ஆன், ஹதீஸ் மற்றும் மஸுராக் கோட்பாடுகளுக்கு அமைவாக திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காகவும், இவ்வாறான மாற்றங்களை இக்கட்சியில் உள்ள பெரும்பாலான மூத்த உறுப்பினர்களும் விரும்பியிருந்ததாலும் தலைவருக்கு ஒரு வேண்டுகோளை முன்வைப்பதற்காகவே பொது மகஜரில் நாங்கள் கையொப்பமிட்டோம்.
எனினும் அந்த மகஜரில் கையொப்பமிட்டதற்குப் பின்னர், அதில் உள்ள முதல் பக்கத்தில் தலைவருக்கு எதிரான விடயங்களை வேறுசில தரப்பினர் உள்ளடக்கி, தலைவருக்கு எதிராக சதி செய்ய விழைந்ததாக எங்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்படுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த மகஜரின் பிரதியையும், கட்சி யாப்பின் பிரதியையும், கட்சியின் ஒழுக்க நெறிக் கோவையையும் எங்களது முறைப்பாட்டுடன் ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் கையளித்துள்ளோம்.
அல் குர் ஆன் மற்றும் ஹதீஸ் வழிகாட்டலில் கட்சி யாப்பு அமைவதனை உறுதிப்படுத்துவதே எங்களது உயர்வான நோக்கமாகும். கட்சித் தலைமைத்துவத்துக்கு எதிராக செயல்படுவது எங்களின் நோக்கமில்லை என்றும் தெளிவுபடுத்துகிறோம்.
மேற்கூறிய உயரிய விழுமியங்களால் கட்டுண்டு, கட்சியின் பிரச்சினைகளை நாங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வாதாட ஒரு போதும் விரும்பவில்லை. அதனால்தான் ஜம்இய்யத்துல் உலமா சபையின் முன், எங்களது முறைப்பாட்டினை முன்வைத்துள்ளோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்”
இவ்விடயம் குறித்து, மேற்படி இருவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.