பொன்சேகாவும், நீதியமைச்சரும்: கதை சொல்லும் புகைப்படம்
– மப்றூக் –
சரத் பொன்சேகா – ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, நேற்றைய தினம் சபையில் சத்தியப் பிரணமாணம் செய்து கொண்டதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளன.
இவ்வாறு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஒன்று மிகவும் சுவாரசியமானது.
நாடாளுமன்றில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், சரத் பொன்சேகாவும் அருகருகே அமர்ந்து, புன்னகையுடன் மிகவும் இயல்பாக உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே அதுவாகும்.
இந்தப் புகைப்படத்தில், மேற்படி இருவருக்கும் பின்னாலுள்ள வரிசை ஆசனத்தில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உட்கார்ந்துள்ளார்.
நீதியமைச்சர் விஜேதாஸ – சோகமாக அல்லது ஏமாற்றமடைந்த நிலையில் அல்லது தீவிரமான யோசனையுடன் இருப்பது போல் அவரின் முகபாவனை உள்ளமையினை அந்தப் புகைப்படத்தில் அவதானிக்க முடிகிறது.
சரத் பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கக் கூடாது என, விஜேதாஸ ராஜபக்ஷ – மிக வெளிப்படையாக கட்சிக்குள் எதிர்ப்புக் காட்டி வந்தார்.
அவ்வாறு சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமாயின், விஜேதாஸ ராஜபக்ஷ – தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்வார் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
‘எவன் கார்ட்’ விவகாரத்தில் குற்றவாளிகளை நீதியமைச்சர் காப்பாற்ற முயற்சிக்கின்றார் என்று, சரத் பொன்சேகா குற்றம் சாட்டி வந்தமை இங்கு குறிப்பிடத்தகக்து.