நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும்

🕔 January 17, 2016

Article - Ashad - 02
அம்பாறை மாவட்டம்  – அக்கரைப்பற்றைச் சேர்ந்த கட்டுரையாளர் ஏ.எல்.ஆஸாத்,  இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படைக் குறைபாடு

யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு கால கட்டமாகும்.  அரசியல்சார் தனி மனித பண்புகளைத் தெளிவாக வெளிக்காட்டிய காலம் அதுவாகும்.

மக்கள் நலன்களுக்கென தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்ததாக மார்தட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகள், முன்நின்று நிறைவேற்றிய சில விடயங்கள் இதற்கு தெளிவான சான்றாகும்.

1. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை
2. சூதாட்டச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியமை
3. 18ஆம் அரசியலமைப்புச் சீர்திருத்தம்
4. மாகாணசபை அதிகாரங்களை வலுவற்றதாக்கிய திவிநெகும சட்ட மூலம்.

போன்றவை என்ன நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டன என்பது அனைவரும் அறிந்தாாகும். மேற்குறிப்பிட்டவைக்கு ஆதரவாக வாக்களித்த அமைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும், எந்த சமூகம் சார் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டனர் என்பதைக் கண்டுபிடிக்க, நுணுக்குக் காட்டியோ மோப்ப நாயோ தேவைப்படமாட்டாது.

இங்கிருந்தே எமது அடிப்படைக் குறைபாடு ஆரம்பிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கொள்கை சார் அரசியல் ஸ்தாபனங்களிடம் இருக்கின்ற சமூகப் பற்று, எமது தலைவர்களிடம் உண்டா? என்றால் அதற்கு விடை அடிப்படைக் குறைபாடாகும்.

ஜனநாயகமும் நல்லாட்சியும்

இரண்டு தடவைக மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியும் என்பதை 18ஆவது சீர் திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்த மஹிந்தவை எதிர்க்கும் முடிவினை, ஜனாதிபதி மைத்திரி எடுத்ததிலிருந்தே நாட்டில் நல்லாட்சிக்கான அடிப்படை ஏற்படுத்தப்பட்டது.
குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம் மற்றும் பொம்மை அமைச்சுக்கள் என, மக்களின் இறைமை (sovereignty) சுக்குநூறான போதே மைத்திரியின் உதயம் அருமருந்தானது.

  • 2014.11.11 – சோபித தேரர் மற்றும் ரத்னதேரர் ஆகியோரின் தலைமையில் நல்லாட்சி அமைப்பது தொடர்பான முதற் கூட்டம் இடம் பெற்றது.  UNP, JVP ,TNA ,NFGG  உட்பட, இன்னும் பல கட்சிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் அதில் கலந்துகொண்டனர்.

  • 2014.11.21 – மைத்திரிபால பொது வேட்பாளராக கொழும்பு நகரமண்டபத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார்.

  • 2014.11.26 – மகிந்த ராஷபக்ச அரசாங்கத்தின் பல கெடுபிடிகளுக்கு மத்தியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறூக், பொது வேட்பாளருடன் இணைவு.
  • 2014.12.23 – றிசாட் பதியுதீன் தனது ஆதரவை மைத்திரிக்கு வழங்குவதாக அறிவித்தார். இருப்பினும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைச்சர் ஹிஸ்வுல்லா, சட்டத்தரணி சஹீட், அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான பாயிஸ் மற்றும் சுபையிர் ஆகியோர் மஹிந்தவோடு தொடர்ந்தும் செயற்பட்டமை எம்முன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் முதற் படியாகும்.

  • 2014.12.28 – தபால் மூல வாக்கெடுப்பு முடிவடைந்ததன் பின்னர்தான் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வேறு வழியின்றி மைத்திரிக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது.
  •  2014.12.30 –தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கான தனது ஆதரவை தெரிவித்தது.

நல்லாட்சிக்கான ஆதரவை காலம் தாழ்த்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்தியது. மைத்திரிக்கான தமது ஆதரவினால், மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகி விடக்கூடாது என்பதே அந்தகால தாமதமான ஆதரவின் நோக்கம். அதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அதை இன்று அறுவடையும் செய்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவருடன் சில உறுப்பினர்களைத் தவிர, ஏனைய நாடாளுமன்ற மற்றம் மாகாணசபை உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவை வழங்க தடைகளை போட்டார்கள்.

அதற்காகவே கட்சியின் உயர் பீட கூட்டங்களையும் பல தடவைகள் நடத்தினார்கள். எனினும் மைத்திரிக்கு வாக்களிக்க மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து இருந்ததனாலும், தமது அரசியல் எதிரியான ரிஷாட் பதியுதீனின் மாறுதல் தங்களது அரசியல் இருப்பை கேள்வியாக்கும் என்பதனாலும் வேறு வழியின்றி, வழமை போன்று ‘சென்றுவருகிறோம்’ என மகிந்த ராஜபக்ஷவிடம் கூறிவிட்டு வந்தவர்கள் இன்று நல்லாட்சியை குறை கூறுகின்றனர்.

இருப்பினும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அத்தருணங்களில் ‘இந்நாட்டு முஸ்லிம்களை இறைவனுக்கு அடுத்து மஹிந்தவால் மட்டுமே காப்பாற்றமுடியும்’ என்று, தனது நன்றி விசுவாசத்தை காட்டுவதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதம் முஸ்லிம் சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைத்த அருவருப்பானதொரு நிகழ்வாகும்.

ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சிக்காக ஆதரவு வழங்கும் முடிவை SLMC, ACMC ஆகியன இக்கட்டான நிலையிலிருந்தே எடுத்தன என்பதற்கு மேற்காட்டிய திகதி வாரியான நிகழ்வுகள் (chonological events) சிறந்த சான்றாகும்.

நாட்டில் நல்லாட்சி மலர்ந்து சுமார் ஒருவருடம் கழிந்த நிலையில், சிறுபான்மையின மக்கள் எத்தகைய நலன்களைப் பெற்றுள்ளனர் என்பது குறித்த சூடான வாதப் பிரதிவாதங்கள் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

வலுவானதொரு கட்சியின் ஸ்திரத்தன்மையை அடகு வைத்தே இந்த நல்லாட்சி பெறப்பட்டது. UNP, UPFA ஆகிய கட்சிகள் இணைந்து செயற்பட்டு பல தியாகங்களையும் விட்டுக் கொடுப்புக்களையும் செய்தமையினாலேதான் நாட்டின் இன்றைய நல்லாட்சி மலர்ந்தது.

மடமைத் தனம்

பொதுவாக மடமைத்தனத்துக்கு அர்த்தமாக குறிப்பறிந்து நடக்காமை மற்றும் புத்திசாலித்தனம் இல்லாமை என்று குறிப்பிடலாம். எங்களது அரசியல்வாதிகள் அரசியல் பேசும் இடமாக பொது மக்களுடனான சந்திப்புக்கள் மற்றும் பாடசாலைகளில் இடம் பெறும் நிகழ்வுகளையே பயன்படுத்துவார்கள்.

இவ்வறான இடங்களில் அரசியல் பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லையென்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், அங்கே மட்டும்தான் அரசியல் பேச இவர்களால் முடியும்.

பலமான அமைச்சுப் பதவிகளை வகித்தும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அறிந்திருந்தும் அவற்றினை நிவர்த்திக்க, என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்விக்கு நாம் விடையேதும் எதிர்பார்க்கத் தேவையே இல்லை.

நல்லாட்சியின் ஒரு வருட பூர்த்தியில், இவ்வாட்சி மக்கள் மனதில் எவ்வாறான பிரதி விம்பத்தை தோற்றுவித்துள்ளது என்கின்ற கருத்தாடலைத் தொடங்க முன்னர், முஸ்லிம் அரசியல்வாதிகளின் மனங்களில் அது எத்தகைய பேரிடியை இறக்கியுள்ளது என்பதை அன்மையில் இறக்காமத்தில் இடம் பெற்ற வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சிகளை வழங்கும் நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆற்றிய உரையின் கீழ்வரும் கூற்று புலப்படுத்துகிறது.

“ஒரு வார காலத்துக்கு நாட்டில் நல்லாட்சியைக் கொண்டாடுமாறு பணிக்கப்பட்டுள்ளோம். நாமும் கொண்டாட முயற்சிப்போம். ஆனால், இவ்வாட்சியில் தமிழ் சமூகமும் மலையக சமூகமும் பெற்றுக் கொண்டுள்ள அனுகூலங்களை விட, எமது சமூகம் பெற்றுக் கொண்டுள்ள அனுகூலங்கள் குறைவானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்”

நிச்சயமாக. ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது. மாகாணசபை உறுப்பினர் தவத்தின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. தவத்தைப் போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை அனுகூலங்கள் குறைந்துதான் போகும்.

மேற்படி நிகழ்வில் கோழிக் குஞ்சுகளை வைத்து, எவ்வாறு தமது பொருளாதாரத்தை மேன்படுத்துவது என்று கூறியிருந்தால், நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு பிரயோசனமாக இருந்திருக்கும்

நல்லாட்சியின் பயன்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்காமல் போனமைக்கு யார் காரணம்? மைத்திரிபால சிறிசேனவா? ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது, வழமை போன்று இதன் பின்னாலும் யூதனின் சதி இருப்பதாகச் சொல்லப் போகிறார்களோ தெரியாது. காரணத்தை தெளிவாக யோசித்துப் பாருங்கள்.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளா, தவம் தனது உரையில் சுட்டிக் காட்டிய எமது சமூகத்தின் பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்வதற்கு, எந்தவொரு போராட்டமோ, முயற்சியோ மேற்கொள்ளப்படவில்லை. அப்படியானால், இந்த வெற்றுக் கோஷங்களால், மாகாணசபை உறுப்பினர் தவம் எதனை சாதிக்க நினைக்கிறார் என்று தெரியவில்லை.

இதைவிட வேகமாக, தேர்தல் காலம் வந்தால் முஸ்லீம் சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்சனைகளையும் முழங்குவார்கள். முஸ்லீம் சமூகத்தின் காவலர்கள் என மார்தட்டிகொள்கின்ற இவர்களுக்கு, பிரச்சினையை தீர்ப்பதற்கு உண்மையான அக்கறை இருக்கின்றதா? என மனச்சாட்சியைத்தொட்டு அவர்கள் கூற வேண்டும். பிரச்சினை முடிந்துவிட்டால் இவர்களால் எப்படி அரசியல் செய்ய முடியும்.

இந்த விடயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஒரே வகையான போக்கைத்தான் கடைப்பிடிக்கின்றார்கள். அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் மற்றும் மாகாண சபை ஒன்று கூடலில் பேச வேண்டியவற்றை, விடயமே அறியாத பாமர மக்களிடம் பேசுவதால்தான் அதனை மடமைத்தனமாக கருத வேண்டியிருக்கிறது.

தமிழ்ச் சமூகமும், மலையக மக்களும் பெற்றுக் கொண்ட நலன்கள் வெறுமனே தானாகவே நடந்தவை என்று கூறமுடியுமா? அதற்கு பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டுதான் இத்தகைய அடைவை அவர்கள் பெற்றுள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு, வழக்கு நடவடிக்கை ஏதுமின்றி கைது செய்யப்பட்டவர்களில் 60இற்கு மேற்பட்டவர்களை வெளியே கொண்டு வந்துள்ளனர், இது சாதாரண விடயமல்ல. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போராடிய ஒரு குழுவினரை நாட்டில் சுதந்திரமாக நடமாட விடுவது பல்வேறு அழுத்தங்களை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இக்கோரிக்கையில் அவர்கள் வென்றுள்ளார்கள் என்றால், தன்னலமற்ற அம்மக்கள் பிரதிநிதிகளின் முழு மொத்த முயற்சியாகவே அதனைக் கருத வேண்டியிருக்கிறது.

இதுமாத்திரமல்லாமல் இந்த நல்லாட்சியை பயன்படுத்தி அதியுயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள், மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் எதிர்வரும் நாட்களில் மேலும் 800 ஏக்கர் நிலங்கள் கையளிக்கப்பட உள்ளன. இவ்விடயங்கள் இந் நாட்டிலுள்ள சிங்கள பேரினவாத சக்திகளுக்கு தீனி போடும் நிகழ்வுகளாகும்.

வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, நாட்டினுள் பெறப்பட வேண்டிய உரிமைகள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்துவது மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக, தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளனர். வெறுமனே, அரசே வலிந்து இந்த செயற்பாடுகளை மக்களுக்கு வழங்கியது என்று கருதுவதும் முட்டாள் தனத்தில் ஒன்றுதான்.

ஆனால் முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் -மத்திய அரசிலும் மாகாணத்திலும் அமைச்சுப்பதவிகள் முதலமைச்சுப்பதவி மற்றும் தேசிய பட்டியல்களை பெறுவதற்கு எடுத்த முயற்சிகளில் ஒரு சதவீதத்தையேனும், தமது மூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுத்திருப்பார்களாயின்,  நிச்சயமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் முஸ்லீம்களின் பூர்வீக காணிகளை மீட்டெடுத்திருக்கலாம். பலபிரச்சனைகளும் தீர்ந்திருக்கும்.

தமக்கு கிடைக்க வேண்டிய சுகபோகங்களை, பதவிகளை மற்றும் வசதி வாய்ப்புக்களைத் தூக்கிவீச தயாராக இருந்திருந்தால், மக்களின் உரிமைகளை அரசிடம் பேரம் பேசும் நெஞ்சுரம் நிச்சயமாக வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பேசாமடந்தை

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமின் பாணி சற்று வித்தியாசமானது. பேச வேண்டியதை அது சென்றடையக் கூடிய இடத்தில் பேசாமால் ஊமையாக இருந்து விட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் வழக்கம் போன்று தன் காந்தக் குரலாலும் பேச்சாற்றலாலும் மக்களை முட்டாளாக்கும் கோட்பாடுகளை முன்மொழிவார்.

நாட்டின் அதிகார மையத்தில் கொள்கை வகுப்புக்கள் நடைபெறும் போது, அந்தந்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தத்தமது சமூகங்களின் நலன்களில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போது, எமது தலைமைகள் ‘முஸ்லிம்ளின் ஏக பிரநிதி’ என்று கூப்பாடு போடும் வேலையை மட்டுமே செய்கின்றார்கள்.

இந்த அப்பாவி சமூகத்திடம் இருந்து அதிக மாலைகளையும், புள்ளடிகளையும் பெறுகின்ற தேசிய தலைவர்களுக்கான போட்டி நடக்கிறதே ஒழிய, மக்களின் பிரச்சினைகளை தேசியமயப்படுத்தவும், சர்வதேசமயப்படுத்தவும் நடவடிக்கைகள் எதுவும் நடப்பதாய் இல்லை.

எமது தலைவர்களுக்கு ஆங்கிலம் தெரியும், சிங்களம் தெரியும், நன்றாக மேடையில் பேசத்தெரியும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகத் தெரியும், ஆடத் தெரியும், பாடத் தெரியும் ஏன், கம்பன் விழாக்களில் கவிதையும் பாடத் தெரியும்.

ஆனால் இந்த சமூகத்தின் ஆண்டாண்டு கால பிரச்சனைகளை எங்கே போய் பேசித் தீர்ப்பது என்பது மட்டும் தெரியாமல் இருப்பதுதான், இந்த சமூகத்தின் சாபக்கேடே தவிர வேறு ஒன்றுமில்லை.

புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதனூடாக இந்த நாட்டின் தலைவிதியை மாற்றி எழுதும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அரசியல் அமைப்பு சபையில் முஸ்லீம் சமூகத்தின் ஏக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை, சரியான கரிசனையில்லாமல் இருக்கிறது. அவ்வாறு இருப்பதன் ஆபத்தினை இந்த சமூகம் எதிர் நோக்கத்தான் போகின்றது.

புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொண்டு வரப்பட்டதன் பின்னால், அதில் முஸ்லீம் சமூகத்தின் அபிலாசைகள் உள்வாங்கப்படவில்லை என்கின்ற வரலாற்றுத் தவறு இடம்பெற்று, இந்த சமூகம் அரசியல் அமைப்பு ரீதியான அங்கீகாரமற்ற ஓர் அநாதை சமூகமாகும் போது, அதனையும் வைத்து எப்போதும் அரசியலில் தூங்கியே கிடக்கின்ற இந்த முஸ்லீம் சமூகத்தின் வாக்குகளைப் பெற ‘சிங்கள தலைவர்களும், தமிழ் தலைவர்களும் எங்களை ஏமாற்றி விட்டார்கள்’ என்று கூறும் அயோக்கியத்தனத்தை தவிர, வேறு எதனை எமது முஸ்லிம் தலைமைகளால் கூறமுடியும்.

மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள் என்றால், அதற்கு காரணம் இவர்கள் மீதுள்ள நம்பிக்கை என்று மட்டும் தயவு செய்து நினைத்து விடக்கூடாது. வேறு தெரிவு மக்களுக்கு இல்லை என்பதால்தான், இவர்கள் இன்னும் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கிறார்கள் என்பதை, இவர்கள் மறக்காமல் இருப்பது நல்லது.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்ததாக, அதற்காக போராடியதாக புலவர்களை வைத்து, பொற்கிளி கொடுத்து, புகழ்மாலை எழுதி, கற்களில் பொறித்து, மண்ணுள் புதைத்தால் ஒழிய – உலகம் இவர்களை உதவாக்கரையாகத்தான் எழுதும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்