தம்புள்ளை பள்ளிவாசலைப் படமெடுத்த பிக்குகள்; பொலிஸார் வரும் முன்பு அகன்றனர்
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்கு ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருந்த ஜீப் வண்டியில் சென்ற இரு பௌத்த பிக்குகளும், இரு இளைஞர்களும் பள்ளிவாசலை புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அயல் வீட்டார்களிடம் பள்ளிவாசல் அப்புறப்படுத்தாமைக்கான காரணத்தை வினவியுள்ளனர்.
ஜீப் வண்டியின் முன்னால் ஒட்டப்பட்டிருந்த ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர் பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. கமராவில் பதிவுறாத வகையில் ஜீப் வண்டி பின் நோக்கியே செலுத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம் தம்புள்ளை பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக அறிவித்ததையடுத்து, பொலிஸார் தம்புள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமரகோன் தலைமையில் உடன் சென்றிருந்தனர். ஆயினும், பொலிஸார் ஸ்தலத்துக்கு விஜயம் செய்வதற்கு முன்பாக, குறிப்பிட்ட ஜீப் வண்டி அவ்விடத்திலிருந்து அகன்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜீப்வண்டியில் வருகை தந்த பௌத்த பிக்குகள், இளைஞர்களும் பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் ஏன் இந்தப் பள்ளிவாசல் இவ்விடத்திலிருந்து அகற்றப்படாமலிக்கிறது என்று வினவியிருக்கிறார்கள். பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்திருக்கின்றார்கள். இது பற்றி தம்புள்ளை பொலிஸில் நாம் முறைப்பாடு செய்திருக்கிறோம் என பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசல் தம்புள்ளை கடும்போக்கு குழுவினரால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதியன்று தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் ரங்கிரி – ரஜமகாவிகாரைக்குச் சொந்தமான புனித பூமியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்விடத்திலிருந்து பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டுமெனவும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தம்புள்ளையில் பள்ளிவாசலைச் சூழவுள்ள பல வர்த்தக நிலையங்கள் வீடுகள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில வீடுகள் அப்புறப்படுத்தப்படாதுள்ளன.
அத்துடன், பள்ளிவாசல் நிர்வாகம் பொல்வத்தை பகுதியில் காணி வழங்கப்பட்டால் அவ்விடத்திலிருந்து பள்ளிவாசலை அகற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி: விடிவெள்ளி