மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர்

🕔 March 5, 2022

மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

நாணயசபை கூட்டம் நேற்று (04) இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றருக்கு கனியவள கூட்டுத்தாபனத்திற்கு 20 ரூபாவும், ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலுக்கு 16 ரூபாவும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றருக்கு 54 ரூபாவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றருக்கு 35 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சதவீதம் அதிகரித்துள்ளமையினால் மின்சார சபைக்கும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, ஒரு அலகு மின்சாரம் – மின்சார சபையினால் 29 ரூபாவுக்கு உற்பத்தி செய்யப்படுவதாக அறிவித்துள்ளதுடன், மின்சாரம் ஒரு அலகுக்கு 16 முதல் 17 ரூபா மாத்திரமே அறவிடப்படுவதாக அதன் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சர்வதேச சந்தையுடன் ஒப்பிடும் போது நாட்டில் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

எனவே எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் என்பவற்றை அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்