அழ்ழாஹ், குர்ஆன், நபிகளாரை அவதூறு செய்த நாமல் குமாரவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
– அஹமட் –
அழ்ழாஹ், அல் குர்ஆன் மற்றும் முகம்மது நபியை அவதூறாகப் பேசிய நாமல் குமார என்பவருக்கு எதிராக, மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின் முறைப்பாடு ஒன்றினை பொலிஸ் தலைமையகத்தில் இன்று (04) பதிவு செய்தார்.
யூடியுப் சேனல் ஒன்றுக்கு நாமல் குமார என்பவர் 04 நாட்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழ்ழாஹ்வையும், அல் குர்ஆனையும் முகம்மது நபியையும் அவதூறாகப் பேசியதாகவும், குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தனது முறைப்பாட்டில் மௌலவி ரஸ்மின் கோரியுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்த பின்னர் மௌலவி ரஸ்மின் தெரிவிக்கையில்;
“இவ்வாறான பேச்சுக்கள் தொடர்ச்சியாக நாட்டுக்குள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி குர்ஆன்தான் என்று இவர்கள் கூறுகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் திசை திருப்பும் வகையில் குர்ஆனையும், நபிகள் நாயகத்தையும் இவ்வாறு அவமானப் படுத்தும் வகையில் நாமல் குமார என்பவர் பேசுகின்றார்.
அழ்ழாஹ் கூறியதைத்தான் குர்ஆனில் நபியவர்கள் சொல்லியுள்ளார்களா என்கிற சந்தேகம் தனக்கு உள்ளதாக நாமல் குமார தெரிவித்துள்ளார். மேலும், ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி குர்ஆன்தான் என்றும் நாமல் குமார கூறியுள்ளார்.
தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தாலும் இதைச் சொல்வதற்கு தான் தயங்கப் போவதில்லை என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவ்வாறு பேசுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நாம் நடவடிக்கை எடுத்தால்தான், இதற்குப் பின்னர் மதங்களை நிந்தனை செய்யும் நடவடிக்கை நிறுத்தப்படும்” என்றார்.
வீடியோ