சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை

🕔 January 10, 2022

– பாறுக் ஷிஹான் –

ஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமுடைய மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சிங்கள மொழியில் காணப்பட்டதால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளது.

குறித்த குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்னத்தின் கையெழுத்துடன், அவர் சார்பாக கல்முனை மேல் நீதிமன்றில் அரச சட்டவாதி இன்று (10) தாக்கல் செய்தார்.

இதற்கமைய குற்றப் பத்திரமானது கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட நிலையில், குற்றப்பத்திரமானது சிங்கள மொழியில் காணப்பட்டமையினாலும் சந்தேக நபர் தமிழ் பேசும் ஒருவராக இருப்பதனாலும் குற்றப் பத்திரத்தில் உள்ள சகல விடயங்களையும் தமிழ் மொழியில் மாற்றி வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, குறித்த வழக்கை ஆராய்ந்த நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஒத்திவைத்தார்.

இதன்போது சஹ்ரானின் மனைவி பிரதிவாதி பாத்திமா ஹாதியா மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். அவர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்