யானைத் தந்தத்தை பஸ்ஸில் கடத்திய நபருக்கு, 14 நாட்கள் விளக்க மறியல்: கல்முனை நீதிமன்றம் உத்தரவு
– பாறுக் ஷிஹான் –
யானைத்தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக கடத்திச் சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை ஓந்தாட்சிமடம் ராணுவ சோதனை சாவடியில் வைத்து, கடந்த சனிக்கிழமை (10) அதிகாலை, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
கல்முனை ஊடாக திருகோணமலைக்கு பயணம் செய்த தனியார் பேரூந்து ஒன்றில் பயணம் செய்தபோது இவர் கைதானார். சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க குமார என்பவராவார்.
விசேட தகவல் ஒன்றினை அடுத்து ராணுவத்தினர் சோதனை சாவடியில் பரிசோதனைகளை மேற்கொண்டு, இச்சந்தேக நபரை கைது செய்து கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நீதவானின் உத்தரவுக்கமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மிகச் சூட்சுமமான முறையில் யானைத்தந்தத்தை இரு பயணப்பையை பயன்படுத்தி எடுத்து செல்ல முயற்சித்துள்ளார்.
சுமார் 02 அடியுள்ள யானைத்தந்தம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது, யானை கொல்லப்பட்டு தந்தம் பெறப்பட்டதா? எனும் கோணங்களில் தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.