சோகக் கதை கேட்டு, பறித்தெடுத்த பொருட்களை மீளக்கொடுத்த கொள்ளையன்: வெள்ளவத்தையில் சம்பவம்

🕔 December 14, 2021

பெண்ணொருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட நபர், அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை கேட்டு, கொள்ளையிட்டவற்றை மீள கையளித்த சம்பவமொன்று கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் நடந்துள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 03 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் தொழிலுச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரமும் வழமையைப் போன்று குறித்த பெண் தொழிலுக்கு சென்று – இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, அப்பெண்ணை வழிமறித்த ஒருவர் தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தன்னை பொலிஸ் உத்தியோக்கதர் என்று கூறி நபர், அப்பெண்ணை மிரட்டி அவர் செல்லும் வழியில் அவரை பின் தொடருமாறு கூறியுள்ளார். அச்சத்தில் குறித்த நபர் கூறியபடியே அவரை அப்பெண் பின்தொடர்ந்துள்ளார்.

சிறிது தூரம் சென்ற பின்னர் – ஆள் நடமாட்டம் அற்ற பகுதியொன்றில் வைத்து, குறித்த பெண்ணிடமிருந்த பணம், தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை அந்நபர் பறித்துள்ளார்.

இதன் போது அந்த நபரிடம் – குறித்த பெண் தான் 03 பிள்ளைகளின் தாய் என்பதோடு, கணவன் இன்றி பிள்ளைகளுடன் தனியாகவே வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். கணவன் இல்லாததால் குடும்ப பொறுப்பு முழுவதையும் தானே சுமப்பதாகவும், மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் தனது மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

அவரின் பின்னணியை கேட்ட அந்த வழிப்பறிக் கொள்ளையன் – அவரிடம் பறித்த அனைத்து பொருட்களையும் அவரிடமே மீள கையளித்துள்ளதோடு மாத்திரமின்றி, அவரை பாதுகாப்பாக பிரதான வீதி வரை அழைத்தும் வந்துள்ளார்.

கொள்ளையன் ஒருவனிடம் இந்த மனிதாபிமானம் வெளிப்பட்டுள்ளமை ஆச்சர்யமளிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

நன்றி: வீரசேகரி இணையம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்