ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, கடந்த மார்ச் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில், மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றின்போது, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்
ஊடக சந்திப்பொன்றில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்தமை தொடர்பில் ஆசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் நேற்று (25) குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆசாத் சாலி நீதிமன்றுக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.