தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள்

🕔 August 20, 2021

ப்கானிஸ்தானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க; காபூலில் உள்ள தமது தூதரகத்தை இலங்கை மூடவேண்டும் என்றும் ஆப்கானுக்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பமியான் புத்தரின் சிலையை அழித்தது தலிபான்களே என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

அந்த பிராந்தியத்திலிருந்து அகற்றப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம் என்பதையும் ரணில்விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஏற்கனவே உலகம் பெருந்தொற்றின் பிடியில் சிக்குண்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர், தற்போது உலகம் இன்னொரு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானை தலிபான் ஆட்சி செய்த காலத்திலேயே செப்டம்பர் 11 தாக்குதலுக்குக் காரணமான அல்கைதா உட்பட பல ஜிகாத் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டன எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய தலிபான் அரசாங்கத்தின் கீழ் ஆப்கான் மீண்டும் பயங்கரவாதிகளும் ஜிகாத் தீவிரவாதிகளிற்குமான தளமாக மாறக்கூடும் என அனைவரும் கரிசனை கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க; உலக நாடுகளின் மீதான தாக்குதலையும் குரானை தவறாக அர்த்தப்படுத்தியவர்களையும் இலங்கை அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்