கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்புக்கான தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடவடிக்கை குறித்து புகார்

🕔 July 5, 2021

– பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்புக்கான விண்ணப்பதாரர் தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பிழையான செயற்பாடுகளினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல கலைஞர்களும், எழுத்தாளர்களும் புறக்கணிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் இவ் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பிழையாகவே செயற்பட்டு வருகின்றமை பற்றிய முறைப்பாட்டை, முன்னர் பிரதேச செயலாளராக இருந்த ஜே. லியாக்கத் அலியிடமும், தற்போதைய பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. சாபிரிடமும் முன்வைத்தும் கூட இந்த புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கலைஞர்கள் சுட்டிக்காட்டினர்.

கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்பு –  2021 தெரிவுக்கான பெயர்களை தெரிவு செய்ததில்கூட கலாச்சார உத்தியோகத்தர் பிழையான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும், குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் தனிப்பட்ட முறையில் அறிவித்தல்களை வழங்கியதாகவும் அறிய முடிகிறது.

இது தொடர்பில் குறித்த கலாசார உத்தியோகத்தரிடம் வினவியபோது; 2021 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்புக்கான விண்ணப்பத் தெரிவு இடம்பெற்று விட்டதாகவும், தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களின் பெயர் விவரங்கள் மாகாணப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தெரிவை எவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டபோது; “கலைஞர் கௌரவிப்புக்கான விண்ணப்பம் கோரும் அறிவித்தலை ஒரு நாள் மட்டும் பத்திரிகையிலும், தபால் நிலையத்திலும், நூலகங்களிலும் காட்சிப்படுத்தியதாகவும், தனக்குத் தெரிந்த கலைஞர்களுக்கு வட்ஸப் மூலம் தெரியப்படுத்தி தெரிவு செய்ததாகவும் குறித்த உத்தியோகத்தர் தெரிவித்ததாகவும் கூறினர்.

கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக, கடந்த வருடமும், இவ்வருடமும் எமது நாட்டின் பல பிரதேசங்கள் முடக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், ஊரடங்கு மற்றும் பயணத்தடைகள் இன்றுவரை அமுல்படுத்தப்பட்டும் உள்ளன.

இதனால் அரச மற்றும் அரச சார்பற்ற எல்லா நிறுவனங்களும் முறையாக இயங்காமலும் உள்ளதோடு, பொதுமக்களும் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலைமையில், மேற்படி கலைஞர் கௌரவிப்புக்கான விண்ணப்பம் கோரும் அறிவிப்பை அறிந்துகொள்வதென்பது சிரமமான விடயமாகும்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்பு –  2021 தெரிவுக்கான விண்ணப்பதாரர் தெரிவினை மேற்படி கலாசார உத்தியோகத்தர் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என கேள்வியெழுப்பப்படுகின்றது.

இந்த குறைபாடுகளை உரிய உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தியும் தவறுகளை சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கப்படாமை குறித்து கலைஞர்களும், எழுத்தாளர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த முறையற்ற தெரிவு தொடர்பான முறைப்பாட்டுக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதன் பிரதிகளை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஷித்த பீ. வணிகசிங்க, கிழக்கு மாகாண காலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். நவனீதன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. சாபீர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்பு வருடாந்தம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்