கிழக்கிலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு

🕔 May 5, 2021

– பைஷல் இஸ்மாயில் – 

கிழக்கு மாகாணத்தில் உள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று புதன்கிழமை உத்தவிட்டுள்ளார்.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதருக்கு ஆளுநர்  அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 283 கொரோனா நோயாளிகளுக்காக, இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருகோணமலை – கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் 50 பேருக்கும், நிலாவெளி ஆயுர்வேத வைத்தியசாலையில் 48 பேருக்கும், மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் 60 பேருக்கும், எறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும், அம்பாறை – வேரண்கரகொட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் 30 பேருக்கும், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும் அட்டாளைச்சேனை தள வைத்தியசாலையில் 30 பேருக்கும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியினை, கொவிட் – 19 தொடர்பான ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெணான்டோபிள்ளை நேற்று (04) செவ்வாய்க்கிழமை வழங்கியிருந்தார்.

இதனையடுத்தே, கிழக்கு மாகாணத்திலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கான உத்தரவினை மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்