வரவு – செலவுத் திட்டம்; முழு விபரம்

🕔 November 20, 2015

Ravi - Budjet - 097
நி
தியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தினைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அதன்போது கூறப்பட்ட விடயங்களில் முக்கியமானவை வருமாறு;

06:22 PM – 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட சமர்ப்பிப்பு நிறைவடைந்தது

06:13 PM – வருமானத்தை அதிகரிப்பதற்காக VAT வரி முறைமை சீராக்கப்படும்.

06:10 PM – திறமையான கலைஞர்கள் தங்களின் அர்ப்பணிப்பின் ஊடாக உருவாக்கப்படும் ஓய்வூதிய சம்பள முறைமைக்கு 15 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

06:09 PM – ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன தொழிற்சங்கங்களின் இணக்கப்பாட்டுடன் மட்டுமே இணைக்கப்படும்.

05:59 PM – குழந்தைகளுக்கான பால்மாவின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும்.

05:58 PM – 11 அத்தியாவசியப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பால்மா, நெத்தலி, டின்மீன், பருப்பு, காஸ் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையே குறைக்கப்படும்.
உருளை கிழங்கு 75-85 ரூபாய்
பெரிய வெங்காயம் 85-95 ரூபாய்
உள்ர் உற்பத்தி பால் 400 கிராம் 295 ரூபாய்
குழந்தைகளுக்கான பால் 100 ரூபாவால் குறைப்பு
டின் மீன் 125 ரூபாய்
நெத்தலி 410 ரூபாய்
பருப்பு 1 கிலோகிராம் 169 ரூபாய்
கருவாடு 1 கிலோகிராம் 1,100 ரூபாய்
கடலை 169 ரூபாய்

05:56 PM – தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, 04 சதவீதமாக அதிகரிப்பு.

05:55 PM – மத்தல விமான நிலையம் சரக்குகளை கையாளும் கேந்திரமாக மாற்றப்படும்.

05:54 PM – பயன்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சலவை இயந்திரம், அலைபேசி மற்றும் தொலைக்காட்சிகளுக்குத் தடை.

05:52 PM – வெளிநாட்டு தூதரகங்களில் சேவையாற்றுகின்றவர்களுக்கு முறையாக பயிற்சி பெற்றுக்கொடுத்தல், அவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி செலவை அரசாங்கம் ஏற்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.

05:51 PM – களனி வெலி ரயில் தண்டவாளத்தை புனரமைப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

05:48 PM – இலஞ்ச ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

05:47 PM – கண்டி, மாத்தறை, நல்லூரில் மூன்று புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.

05:47 PM – இரத்தம், கூழ்மப் பிரிப்பு மத்திய நிலையங்கள் 1,000 ஐ உருவாக்குவதற்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

05:46 PM – ஆங்கிலம், தமிழ் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு வரி விலக்களிப்பு.

05:45 PM – வீதி விபத்துகளுக்கு 10,000 ரூபாய் தண்டம் விதிக்கப்படும்.

05:44 PM – 2016ஆம் ஆண்டிலிருந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

05:39 PM – 75 வயது வரையான சகல பிரஜைகளுக்கும் வைத்திய காப்புறுதி வழங்குமாறு சகல காப்புறுதி நிறுவனங்களிடமும் கோருகின்றேன்.

05:36 PM – தென், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளை முகாமைத்துவம் செய்வதற்கு விசேட பிரிவு ஏற்படுத்தப்படும். அதற்கு முதலீடு செய்வதற்கு இணையுமாறு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கின்றேன்.அதேபோல நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை பாதுகாப்பதற்கு பிரிவொன்று உருவாக்கப்படும். அதன் மூலமாக அதன் உரிமம் மாற்றம் பெறாது.

05:35 PM – பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 428 இலிருந்து 600 ஆக அதிகரிப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

05:34 PM – 2 வருட காலத்துக்குள் பொலிஸ் அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு 3,000 ரூபாய் வழங்கப்படும்.

05:34 PM – பதுளை, திகன மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ளூர் விமான நிலையங்கள் 03 நிர்மாணிக்கப்படும்.

05:34 PM – கொழும்பு கடற்கரை வீதியிலிருந்து பாணந்துறை வரையில் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும். இதற்கு 15,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

05:29 PM – சகல பல்கலைக்கழகங்களுக்கும் Wifi வசதி வழங்கப்படும். இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

05:28 PM – கல்விக்கு 90,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.41  சதவீதமாகும்.

05:28 PM – பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

05:26 PM – அநுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல் வைத்தியசாலைகளுக்கு 3,000  மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். மின்னேரியாவில் சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

05:16 PM – மாலேம்பே மாபொல பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கும் யோசனையை முன்வைக்கின்றேன். அதற்காக 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

05:16 PM – கிளிநொச்சியில் பொறியியல், விஞ்ஞானப்பீடம் மற்றும் வவுனியாவில் விவசாயபீடம் உருவாக்கப்படும்.

05:13 PM – பல்கலைக்கழக மாணவர்கள், மடிக்கணினி கொள்வனவு செய்வதற்காக 30,000 ரூபாய் கடன் வழங்கப்படும்.

05:11 PM – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான முதலீடு 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 2018ஆம் ஆண்டளவில் தங்களுடைய முழுக்கல்விக்காலத்தையும் விடுதி வசதிகளுடன் கழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

05:10 PM – முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அறிமுகப்படுத்திய பாடசாலை சீருடைக்காக வவுச்சர் முறைமை அறிமுகப்படுத்தப்படும்.

05:09 PM – பாடசாலைகளுக்குள் முறையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்காகவும் மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கிடையில்  தொடர்புகளை மேம்படுத்துவதற்காகவும் வகுப்பொன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

05:08 PM – அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் இதழ்களுக்கான இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்படும்.

05:07 PM – 1,000 பாடசாலைகளுக்கான நூலகங்கள், ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 15,000 மில்லியன்  ரூபாய் வழங்கப்படும். கவனிக்கப்படாத பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 30 ஆயிரம் ரூபாய் மில்லியன் ஒதுக்கப்படும்.

05:07 PM – கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் கற்பித்தல் செயற்பாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்குவதற்காகவும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், புதிதாக ஆசிரியர் துறையில் இணைந்தவர்கள் முதல் 05 வருடங்களுக்கு கட்டாயம் பயிற்சி பெற வேண்டும். பிரதேச மற்றும் கிராமிய பாடசாலைகளுக்காக ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைசார் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

05:06 PM – நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் தேவையான சுகாதார வசதிகளை 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நிதி ஒதுக்கப்படும்.

05:03 PM – தனியார் துறையினருக்கு குறைந்தபட்சம் மாதாந்தம்  2,500 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோருகின்றோம்.

05:03 PM – கடன் அட்டைகளை பயன்படுத்தி உள்ளூர்ப் பொருட்களை கொள்வனவு செய்யப்படும்போது, அறவிடப்படும் 1.5 சதவீதமான முத்திரை வரி குறைக்கப்படும். வெளிநாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது 2.5 சதவீத வரி அறவிடப்படும்.

04:59 PM – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் ஒழிக்கப்படும். அதேபோல், அரசாங்கத்தின் சகல வாகனங்களுக்கும் வரி கட்டப்பட வேண்டும்.

04:56 PM – சகல ஊழியர்களுக்கும் சம்பள கணக்கு அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை.

04:55 PM – மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான விலை மதிப்புக்கட்டணம் 2,500 ரூபாய் ஆகும். காருக்கு 15,000 ரூபாய் விலை மதிப்புக்கட்டணம்.

04:54 PM – பாடசாலைகளில் சேர்க்கப்படுகின்ற சகல பிள்ளைகளுக்காகவும் சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சகல வங்கிகளிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

04:53 PM – அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றபோது, அரசாங்கத்துக்கு செலுத்தப்பட வேண்டிய சகல கொடுப்பனவுகளும் அரசாங்கத்தின் தனியான கணக்கின் ஊடாக செலுத்தப்பட வேண்டும்.

04:53 PM – மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான விலை மதிப்புக்கட்டணம் 2,500 ரூபாய் ஆகும்.

04:49 PM – எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்.

04:48 PM – திவிநெகும வங்கி, தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைக்கப்படும்.

04:46 PM – ஆடை, பாதணிகள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான இறக்குமதி வரி விலக்களிக்கப்படும்.

04:46 PM – காரைநகர், கல்முனை மற்றும் சிலாபம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 470 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

04:42 PM – காலி கோட்டை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

04:41 PM – மண்ணெண்னை விலை 10 ரூபாவினாலும் சமையல் எரிவாயு விலை 150 ரூபாவினாலும் குறைக்கப்படும்.

04:39 PM – பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்கி புதிய தொழில் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பேன்.

04:36 PM – சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தெற்காசிய பொருட்களைக் கொள்வனவு செய்து, இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

04:36 PM – நாடாளுமன்றத்துக்கு அண்மையில் சர்வதேச கண்காட்சி மத்திய நிலையத்தை நிறுவுவேன்

04:35 PM – விருந்தோம்பல் துறையுடன் இணைந்துகொள்வதற்கு விரும்புகின்ற இளைஞர்களுக்கு பயிற்சிப்பாடம் அறிமுகப்படுத்தப்படும். ஆகக்கூடுதலாக 15,000 ரூபாய் பெறுமதியான பாடத்திட்டத்துக்கு அரசாங்கம் 50 சதவீதம் செலுத்தும்.

04:33 PM – சர்வதேச சந்தைக்கொள்ளைக்கு அமைவாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முறைமையை இன்னும் வெற்றிகரமாக்குவதற்கு 2016ஆம் ஆண்டு முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை எதிர்பார்க்கின்றோம்.

04:32 PM – கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரசாங்கக் காணிகளில் வீடுகளை நிர்மாணித்து குறைந்த விலையில் வழங்குவதற்கான முறைமை மேற்கொள்ளப்படும். அதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு கடன் வழங்கப்படும்.

04:30 PM – உருக்கு, ஓடுகள், மாபிள் ஓடுகள் மற்றும் மலசலகூட உபகரணங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்.

04:29 PM – கட்டட மற்றும் நிர்மாண பயிலுநர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

04:28 PM – நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்த இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான வரி விலக்களிக்கப்படும்.

04:27 PM – நிர்மாணப்பணிகளுக்காக வருகின்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிர்மாண நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டும்.

04:26 PM – வீடு, சொத்துகளுக்கான வரம்மை ஏற்படுத்துவதற்காக சட்டத்தில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

04:25 PM – புதிய கிராம வீட்டுத்திட்ட  முறைமை உருவாக்கப்படும். அதற்காக 4,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். வீடொன்றுக்கு 03 இலட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

04:21 PM – சேரிகளில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, தனியார் துறையுடன் இணைந்து 15 இலட்சம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

04:20 PM – பயன்படுத்தப்படாத காணிகளானது வீடுகள் நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படும்.

04:20 PM – காணிக்காக வங்கி உருவாக்கப்படும்.

04:20 PM – ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கிகளை நிறுவுவதற்கு 25 மில்லியன் ரூபாய் நிதி.

04:18 PM – இறக்குமதி அபிவிருத்திக்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

04:17 PM – உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை பாதுகாப்பதற்கு சட்டம் கொண்டுவரப்படும்.

04:17 PM – எரிபொருள் சந்தை உருவாக்கப்படும்.

04:17 PM – புதிய இறக்குமதிப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு முதலீட்டு ஊக்குவிப்புச் சபை நடவடிக்கை எடுக்கும்.

04:04 PM – வெளிநாட்டவர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்கப்படும்போது, அறவிடப்படும் வரி விலக்களிக்கப்படும்.

04:04 PM – போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்புக்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

04:02 PM – யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கு 03 வருடங்களுக்கு 4,000 மில்லியன் ரூபாய் வழங்கப்படும்.

04:00 PM – ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக நிறுவனமொன்று உருவாக்கப்படும்.

04:00 PM – அரச நிறுவனங்கள் அனைத்தையும்  2018ஆம் ஆண்டு ஒரு வலயமைப்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

03:59 PM – மீனவ மற்றும் விவசாய வலயத்தை உருவாக்குவதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

03:58 PM – தங்கம் இறக்குமதிக்கான 50 உரிமப்பத்திரங்களை அறிமுகப்படுத்துவேன்.

03:58 PM – மாணிக்கக்கற்கள் ஏல விற்பனை இலங்கைக்குள் இடம்பெறுவதற்கு யோசனை ஒன்றை முன்வைக்கின்றேன்.

03:55 PM – அலங்காரமீன் கைத்தொழிலில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு உந்துவேன்.

03:53 PM – வவுனியாவில் புதிய பொருளாதார வலயம் உருவாக்கப்படும். கிராமிய விவசாயத்துக்கு உதவும் வகையில் சிறிய குளங்கள் மற்றும் ஏரிகள் புனரமைக்கப்படும். அதற்காக 2,000 ரூபாய் ஒதுக்கப்படும்.

03:52 PM – கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவு கொத்தணிக் கிராமமமாக செயல்படுத்தப்படும். இதில் பொதுவசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். ஒரு கிராமத்துக்கு 1,500 ரூபாய் ஒதுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன்.

03:48 PM – பாக்கு சேகரிக்கும் வலயம் உருவாக்கப்படும். அந்த தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு வணிக ரீதியில் பயிர் செய்வதற்காக அரசாங்கம் நிவாரணம் வழங்கும்.

03:47 PM – தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

03:47 PM – தேயிலை தொழிற்சாலை மதீப்பீட்டைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிலோன் ரீ என்ற பெயர் தொடர்ந்து இருப்பதற்கு அந்தப் பெயரை பொறிப்பது கட்டாயமாக்கப்படும்.

03:45 PM – உள்ளூர் கோழி இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட புதிய சந்தைக்கு கோழிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
03:44 PM – மீனவர்களின் காப்புறுதிக்காக ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

03:44 PM – உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். 400 பக்கெட்டின் ஆகக் குறைந்த சில்லறை விலை 325 – 295 வரை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்

03:42 PM – உள்ளூர் பால் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு மற்றும் இறக்குமதியை குறைப்பதற்கு நான் மதிக்கின்றேன். எனினும், பால் விலை கூடியதுடன், யோக்கட் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்தன.

03:41 PM – பழவகை மற்றும் மரக்கறி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நிவாரணம் வழங்கப்படும். இவற்றுக்குத் தேவையான உபகரணங்களுக்கான இறக்குமதி வரி விலக்களிக்கப்படும்.

03:40 PM – நெல் விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்படும். பெரு மற்றும் சிறு விவசாயிகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

03:39 PM – விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்.

03:36 PM – 2014ஆம் ஆண்டு அரிசி அறுவடை குறைந்திருந்தது. உரப் பாவனையினால் சிறுநீரக நோயாளர்களின எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இன்னும் வாதப்பிரதிநிதிவாதங்கள் இடம்பெறுகின்றன.

03:36 PM – அரிசி ஏற்றுமதி வர்த்தகத்தை நோக்காகக்கொண்டு அரிசி உற்பத்தியாளர்களுக்கு உதவியளிக்கப்படும். அதற்காக வெளிநாட்டுச் சந்தையை அறிமுகப்படுத்துவதற்கு முறைமையொன்று தயாரிக்கப்படும்.

03:34 PM – கீரி சம்பாவுக்கு 50 ரூபாய், சம்பா  நெல்லுக்கு 40 ரூபாய், நாட்டரிசி நெல்லுக்கு 38 ரூபாய் ஆகக்குறைந்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனூடாக அரிசி ஒரு கிலோகிராம்  65 ரூபாய்க்கு நுகர்வுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

03:33 PM – விவசாய அறுவடையின் போது, விலைக் குறைப்பைத் தடுப்பதற்கு உயர்ந்த தரத்திலான களஞ்சியசாலைகள் உருவாக்கப்படும்.

03:32 PM – புத்துயிராக்கம் இல்லாத இடங்களை தனியார் பிரிவுகளுக்கு பெற்றுக்கொடுத்து, அதனூடாக அதனை மேம்படுத்துவதற்காக 1,000 மில்லின் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.

03:31 PM – பல்பொருள் அங்காடிகளில் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிலாளர்களுக்கு சிறிய இடத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்

03:30 PM – சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக்கர்கள் கடனை பெறும்போது பிணை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

03:29 PM – பெரும் வணிக நிறுவனங்களின் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

03:29 PM – மிளகாய், செத்தல் மிளகாய், கிழங்கு உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் ஊடாக நாட்டை தன்னிறைவு வடிவத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

03:29 PM – விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது, வரி நிவாரணங்கள் வழங்கப்படும்.

03:28 PM – புதிய விவசாயக் கொள்கையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர்  கவனம் செலுத்தியுள்ளனர்.

03:27 PM – நிகர, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்காக இணைந்த கூட்டுத்திட்டம் அமுல்படுத்தப்படும்.

03:26 PM – சிறு பொருளாதாரத் தோட்டங்கள் மொனராகலை, புத்தளம், யாழ்ப்பாணம், வன்னி உட்பட பல இடங்களில் முன்னெடுக்கப்படும்.

03:25 PM – சகல நிதி நிறுவனங்களும் பரிந்துரைக்கப்பட்ட அதிகார சபையின் கீழ் வருடாந்தக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு  செய்துகொள்ள வேண்டும்.

03:24 PM – சிறு மற்றும் மத்தியதர வர்த்தகர்களின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

03:23 PM – வரவு  -செலவுத்திட்டத்தின் யோசனைகளை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைக்கின்றார்.

03:23 PM – இன, மத, சமூகத் தடைகளைத் தாண்டி அனைத்து மக்களின் நன்மைக்காக அர்ப்பணிப்போம்.

03:22 PM – இருளை சபிக்காமல், மெழுகுவர்த்தியை ஏற்றி இருளை விரட்டியடிப்போம்.

03:21 PM – நாங்கள் முன்வைத்த நல்ல விடயங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று உறுதி செய்கின்றோம். அதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் தலைமை தாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.

03:19 PM – யாழ்ப்பாணத்தில் வீதியொன்றை உருவாக்குவதற்கு டட்லி சேனநாயக்கவினால் யோசனை முன்வைக்கப்பட்டபோது, மக்கள் ஒரு பிடி அரிசி வழங்கி தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர்.

03:18 PM – சூரியசக்தி மற்றும் வாழ்க்கை அடிப்படையிலான மின்சாரம் தொடர்பில் அந்தந்த பிரிவுகள் பயன்படுத்தப்படவேண்டும்.

03:16 PM – வயதானர்களுக்கு சுகாதாரத்திட்டங்கள்.

03:16 PM – வீதிகளில் போகின்ற மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து, வாகனங்களின் எண்ணிக்கை கூடுவதற்கு, பொதுப் போக்குவரத்து சேவையில் தற்போது இருக்கின்ற நிலைமை காரணமாக அமைந்துள்ளது.

03:13 PM – வேகமாக அதிகரித்து வருகின்ற புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

03:09 PM – மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் முறைமையை மீண்டும் உருவாக்க வேண்டும்.

03:08 PM – ஓய்வூதியம் பெறும் மக்களின் தேவைக்கான சேமிப்பு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

03:07 PM – ஆக்கபூர்வமான ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.

03:05 PM – இளைஞர்களுக்கு வேலையின்மை மற்றும் குறைந்த வேலைவாய்ப்பு, பட்டதாரிகளின் ஏற்றத்தாழ்வு இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

03:05 PM – கடந்த அரசாங்கத்தின்போது, கல்விக்கான முதலீடு குறைந்திருந்தது.

03:04 PM – 72 சதவீத மட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரத்துக்கு மிக அதிகமாக உள்ளது.

03:02 PM – அரச கடன் தற்போது 72 சதவீத மட்டத்துக்கு இருக்கின்றது.

03:00 PM – சம்பளச் செலவு கணிசமானளவு அதிகரித்துள்ளது.

03:00 PM – அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு ஆகியவற்றை ஓரளவுக்கு உயர்த்தி எங்களுடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

02:59 PM – பொருளாதார வரவு – செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு பூச்சியக் கோட்பாடு பயன்படுத்தப்பட்டது. இதனை செயற்படுத்துவதற்கு இவ்வளவு காலம் எடுத்தமை தொடர்பில் நான் ஆச்சரியமடைகின்றேன்.

02:56 PM – பூச்சிய வரவு-செலவுத்திட்ட கோட்பாடு பல நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றது.

02:54 PM – வரி சீர்திருத்த செயன்முறையினூடாக அரசாங்கத்தின் அடிப்படை வீதத்தை ஈடுசெய்வதற்கு முடியாது.

02:54 PM – ராஜபக்ஷ நிர்வாக முறைமையின் ஊடாக நாங்கள் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.

02:52 PM – பொருளாதாரப் பேரழிவு நிலைமை நிரம்பி வழிந்தது. இச்சந்தர்ப்பத்திலேயே இந்த வரவு – செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு நாங்கள் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டோம்.

02:52 PM – வரிப்பணம் நாட்டின் முன்னேற்றத்துக்காக மிகக் கவனமாக பயன்படுத்தப்படவேண்டும்.

02:49 PM – தீர்வு காணமுடியாத இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

02:48 PM – புதிய அரசாங்கம் உருவாகிய பின்னர் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் பல முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

02:48 PM – இலங்கை அரசியலில் புதிய அரசியல் ஏட்டைப் புரட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

02:47 PM – மக்களின் சிறு பிரிவினர் தேசிய வருமானத்தில் கூடுதலாக அனுபவிக்கின்றனர் என்று புலனாகின்றது.

02:46 PM – சட்டச் செயல்முறைகள் தொடர்பில் எதிர்பார்த்திருக்குமாறு தேசபக்த மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

02:45 PM – கடந்த அரசாங்கத்தின்போது வரி ஆதாய மட்டம் குறைந்தமையினால், இலங்கையில் வரி பொருளாதரம் சீர்குலைந்தது.

02:44 PM – பொருளாதாரத்தில் பல்வேறான ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. கடந்த அரசாங்கத்தில் நெடுஞ்சாலைகள், விமான நிலையம் போன்றவற்றுக்காக கூடுதலான வெளிநாட்டுக் கடன் பெறப்பட்டது. இந்தச் செலவுகளுக்காக கூடுதலான செலவும் செய்யப்பட்டது.

02:43 PM – தேவையான பொருளாதார மேம்பாடுகளை விடுத்து, பொருளாதார சுபீட்ச யுகத்தை நாட்டில் உருவாக்குவதற்கு கடந்த அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் இருந்தது.

02:42 PM – ஜி.எஸ்.பி. சலுகை இலங்கைக்கு இல்லாமல் போனது.

02:42 PM – சில அரசியல்வாதிகளி்ன் நகைச்சுவை காரணமாக இலங்கை சங்கடமான நிலைக்கு முகங்கொடுத்தது.

02:40 PM – அரசின் அடிவருடிகள் அரசியல்வாதிகளினால், தெற்கில் சுற்றுலா ஹோட்டலில் வைத்து சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டவரை படுகொலை செய்தமையினால், நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இதனால், பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்தது.

02:37 PM – புதிய சிந்தனையினால் பொருளாதாரம் மீண்டும் இலங்கையை நோக்கி வந்தது.

02:36 PM – அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் தேசிய பாதுகாப்பை எப்போதும் அலட்சியப்படுத்த மாட்டோம் என்பதுடன், தேசிய பாதுகாப்புக்காக ஆகக்கூடிய அர்ப்பணிப்பைச் செய்வோம்.

02:35 PM – கடும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து சிறையிலிருந்த மக்களின் யுகத்துக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

02:34 PM – நாளுக்கு நாள் அதிகரித்துள்ள கடன் சுமை  காரணமாக மக்கள் எதிர்பார்த்திருந்த தங்களின் மேம்பாட்டுக்கான பொருளாதாரம் கிடைக்கவில்லை.

02:33 PM – பயங்கரவாதிகளின்  இருண்ட யுகத்துக்கு 2009ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

02:33 PM – 2004ஆம் ஆண்டு ஆட்சி மாறியதினால் எதிர்பார்த்திருந்த பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

02:32 PM – ரணில் விக்கிரமசிங்க பிரதமரால்  2001ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டுவரை பொருளாதார வேகம் நல்ல மட்டத்தில் இருந்தது.

02:31 PM – 2001ஆம் ஆண்டு விவசாயப் பொருளாதார மேம்பாடு அதிகரித்திருந்தது.

02:30 PM – பயங்கரவாதச் செயற்பாடுகளின் காரணமாக பொருளாதாரம் சீர்குலைந்திருந்தது.

02:30 PM – ரணசிங்க பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி, ரொணில் டி மேல் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மிக விசேடமான அரசியல் பாத்திரங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை நல்வழிப்படுத்தினர்.

02:28 PM – இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன, பொருளாதாரக் கொள்கையினூடாக 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரத்துக்குள் நுளைந்தோம்.

02:26 PM – எங்களுடைய பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது.

02:25 PM – காணி, வீடு மற்றும் சுகாதாரப் பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

02:24 PM – நீண்டகால பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முக்கியமாக பொருளாதார அடித்தளம் அத்தியாவசியமாகும்.

02:23 PM – எதிர்காலச் சந்ததியினர் அனுபவிக்கக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம்.

02:21 PM – கடந்த 10 மாதங்களில் இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டது.

02:18 PM – சர்வதேச சந்தை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.

02:18 PM – இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச நாடுகளிலிருந்து நல்லாட்சிக்கு பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
02:18 PM – எதிர்காலச் சந்ததியினருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கம்.

02:17 PM – ஜனவரி 08ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இந்நாட்டின் திருப்புமுனை.
02:17 PM –  நாட்டின் 20 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பிக்கின்றேன்.
01:56 PM – நிதியமைச்சர் சமூகமளித்தார்.

நன்றி: TM

Comments

புதிது பேஸ்புக் பக்கம்