மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

🕔 February 17, 2021

– நூருல் ஹுதா உமர் –

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு, கசையடி வாங்கிக்கொண்டுதான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் என திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

கல்முனையில் நேற்றிரவு (16) தனியார் விடுதி ஒன்றில் கல்முனை பிராந்திய ஆதரவாளர்களுடனான குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

“மக்களை போன்றுதான் நானும் எங்களின் கட்சியுடன் மிகப்பெரும் ஆதங்கங்களுடன் இருக்கிறேன். கடந்த காலங்களில் எங்களின் கட்சியினர் சொந்த கட்சிக்காரர்களை வளர்ப்பதைவிடவும் கொந்தராத்து கட்சிக்காரர்களை வளர்ப்பதையே குறியாக இருந்தனர்.

2015 ஆம் ஆண்டு என்னுடைய மாவட்டத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளரை நான் தோற்கடித்தேன். அவரை எங்கள் கட்சிக்காரர்களே தேசிய பட்டியல் ஆசனம் கொடுத்து எம்.பியாக்கி மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு இணைத்தலைவராகவும் நியமித்தார்கள். இது போன்ற அநீதிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் போனதனாலையே புதிய பாதையை உருவாக்கினோம்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது இப்போதுதான் பிறந்துள்ள குழந்தை. அது இன்னும் வளர வேண்டும். நடக்க, ஓட இன்னும் காலம் எடுக்கும். எங்களை சம்பந்தமே இல்லாத ஹம்பாந்தோட்டைக்கு கட்சிப்பணிக்காக நியமித்தார்கள். மஹிந்தவின் கோட்டைக்குள் சென்று வேலைசெய்ய பயந்தோம். அங்கு நிலை தலைகீழாக இருந்தது. அங்கும் மக்கள் நிறைய மாற்றங்களுடன் எங்களை வரவேற்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியினால் நிறைய புறக்கணிப்புக்களையும், அவமானங்களையும் சந்தித்தோம். நாங்கள் முஸ்லிங்களுக்கு மட்டுமான எம்.பிகள் இல்லை. இங்கிருக்கும் எங்களுக்கு சிங்கள மக்களும் தமிழ் மக்களும் நிறைய வாக்களித்துள்ளனர். அவர்களுக்கும் நாங்கள் குரல்கொடுக்க கடமைப்பட்டுள்ளோம்.

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக பேசிய ஒரே பௌத்த சிங்கள தலைவர் என்றால் அது சஜித் பிரேமதாஸ மட்டும்தான். அவர் நாடாளுமன்றத்தில் ஜனாஸா விடயம் தொடர்பில் பேசிய பின்னரே சிறுபான்மை தலைவர்களான ரஊப் ஹக்கீம் போன்றோர் வாய்திறந்தார்கள்.

கடந்த மாகாண சபை அமர்வுகளில் ‘திவிநெகும’வுக்காக கையை உயர்த்த ஆரம்பித்த இவர்கள், இன்றும் அதையேதான் செய்கிறார்கள். இவர்களை தொடர்ந்தும் நம்ப முடியாது.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் நாங்கள் தனித்தே களமிறங்குவோம். இது தொடர்பில் கட்சியின் உயர்பீடத்திடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளேன்.

இந்த அரசாங்கத்தை இயக்குவது ஊடகங்களும், காவியுடை தரித்த பிக்குகளுமே. ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித்தை மக்களாகிய நாம் நம்ப வேண்டும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்து நிறைய சிறுபான்மை மக்களுக்கு நன்மைகள் செய்திருக்கிறார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் மோசமான ஒன்றாக இருந்தது. எங்களுக்கு இருந்த நல்ல பெயரையும் அந்த காலத்தில் இழந்துவிட்டோம். அந்த அரசாங்கத்தின் தலைவர் யார் என்பதை இறுதிவரை சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது.

ஆனாலும் இந்த அரசாங்கத்தினால் எதிர்வரும் காலங்களில் காதிநீதிமன்றம், மதரஸா என்பன சிக்கலில் மாட்டிக்கொள்ள போகின்றது. அவற்றை நாங்கள் சரியாக அணுகி மக்களுக்கு ஆதரவாக செயற்படுவோம். 2015 வரை தோல்வியை மட்டுமே சந்தித்த நாங்கள், இனி தலைதூக்க முடியாது என்றார்கள். அதிகாரத்தில் இருந்த மஹிந்தவை தோற்கடித்து ஆட்சியை உருவாக்கினோம். 2025 யிலும் அதை சாத்தியமாக்குவோம்” என்றார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்