சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர

🕔 January 7, 2021

ஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றத்திலேயே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபரை தடுத்து விசாரித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை காரணமின்றி ஒன்பது மாதங்களாக ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்? அவரை பிணையில் விடுதலை செய்யுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் கோரிக்கையொன்றை முன்வைத்த போதே, அவர் இதனைக் கூறினார்.

இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின் போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஸ்மன் கிரியெல்ல; “சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஒன்பது மாதங்களாக குற்றச்சாட்டுகள் இல்லாது தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவர் மிகச்சிறந்த சட்டத்தரணி என்பது எம் அனைவருக்கும் தெரியும். எனவே அவருக்கு பிணை வழங்க வேண்டும்” என சபையில் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில்;

“ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட தற்கொலை குண்டுதாரிகளுடன் மூன்று தடவை ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபர் உரையாடியுள்ளார். அவர் ஒரு எகிப்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணும் பயங்கரவாத குழுவுடன் தொடர்புபட்டவர்.

அவர் ‘பேல் ஒப் யுநிட்டி’ என்ற அமைப்பின் பெயரில் பாடசாலை ஒன்றை நடத்தியுள்ளார். அதற்கு சஹரானும் போதனைகளை நடத்தியுள்ளார். இந்த அமைப்புக்கு ‘கட்டார் சரிட்டி’ எனும் நிறுவனத்தின் மூலமாக நிதி உதவிகள் கிடைத்துள்ளன. இந்த ‘கட்டார் சரிட்டி’ என்பது ஐக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட நிறுவனமாகும்.

இந்த சாட்சிகளுக்கு அமையவே அவரை தடுத்து வைத்துள்ளோம். இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட ஒருவர் பற்றி நீங்கள் பேச வேண்டாம் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்