தலைப்புச் செய்திகள்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம்

– முன்ஸிப் அஹமட், படங்கள்: சர்ஜுன் லாபீர் –

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மரணிக்கும் முஸ்லிம்களின் ‘ஜனாஸா’களை (பிரேதங்களை) தகனம் செய்வதைக் கண்டித்து, முகம்மட் பௌஸ் என்பவர் தனது 08 வயது மகனுடன் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்த பாத யாத்திரையை நீதிமன்ற உத்தரவுக்கிணங்க பொலிஸார் தடுத்து நிறுத்தனர்.

குறித்த நபர் தனது மகனுடன் கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வரையில் மேற்படி பாத யாத்திரையை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் மேற்படி நபரும் அவருடைய மகனும் ‘கபன்’ துணிக்கு ஒப்பான, வெள்ளைத் துணியிலான ஆடையினை அணிந்து கொண்டு, முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிரான பதாதைகளையும் ஏந்தியவாறு தமது பாத யாத்திரையை ஆரம்பித்தனர்.

முன்னதாக கொவிட் தொட்டு காரணமாக மரணித்த முஸ்லிம்களுக்கு இவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தி, பிரார்த்தனைகளில் ஈடுபட்ட பின்னர், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் தமது பாத யாத்திரையை தொடர்ந்த போதே, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க – இவர்களின் பாத யாத்திரையினை கல்முனை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.